சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை ‘எடிட்’ செஞ்சு கொடுத்ததே நான் தான்.. இயக்குநர் தகவல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். கிராமப்புற கதைக்களத்துடன் உருவான இந்த இரண்டு படங்களும், கலை ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை. இந்நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்ததாக கூறியுள்ளார்.

சீமான் - பிரபாகரன் புகைப்படம்
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன். அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன்.
அப்படி ஒருமுறை டிவிடிகளை கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் வேண்டும் என்று கேட்டார். நான் எதற்கு என்று கேட்டதற்கு, "நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்" என்று சொன்னார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.
எடிட் செய்யப்பட்ட புகைப்படம்
பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக வேறு வேறு தகவல்களுடன் உலா வரும்போது செங்கோட்டையனை இதுபற்றி சந்தித்து கேட்டேன். நம் புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகிவிட்டார் என சந்தோஷமாக கூறினார். ஆனால், அதே காலகட்டத்திலேயே, இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற தகவலும் பரவியது. ஆனால், இதுவரை நான் யாரிடமும் இதை சொன்னதில்லை.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார். அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் சங்கடப்பட்டிருக்கிறேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
மின்னல் முருகன் பேட்டி
இதுஒருபுறம் இருக்க, 'எல்லாளன்' எனும் திரைப்படத்தை இயக்கிய மின்னல் முருகன் ஒரு பேட்டியில், சீமான், பிரபாகரனை சந்தித்ததும், அவருடன் 3 நாட்கள் தங்கி இருந்ததும் உண்மை எனத் தெரிவித்திருக்கிறார். "வைகோ, பாரதிராஜா மற்றும் பலர் அமைதி சூழலில் போய் பிரபாகரனை பார்த்தார்கள். ஆனால் சீமான் ஈழத்துக்கு சென்ற காலம் போர் நடைபெற்ற உச்சம். நான் அப்போது அங்கு இருந்தேன். சீமான் கட்சியில் எல்லாம் நான் கிடையாது. ஆனால், அவர் அங்கு வந்ததும், இருந்ததும் உண்மை.
தமிழ் பற்றாளராக இருந்ததால் தான் சீமான் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர்கள் மத்தியில் உரையாற்ற வைக்கப்பட்டார். விடுதலை புலிகளின் உடையை போட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது என சீமான் அப்போது கூறினார். அதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம் பெற வேண்டும் என சொல்லப்பட்டது. சீமான் அங்கிருந்த துப்பாக்கிகளில் பயிற்சி எடுத்தார். 3 நாட்கள் சீமான், பிரபாகரன் உடன் தான் இருந்தார்." எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications