எனக்கு எதிராக பிடிவாரண்ட்டா?.. தவறான செய்தி.. இயக்குநர் ஷங்கர் அறிக்கை
சென்னை: எனக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததாக வந்த செய்தி தவறானதாகும் என இயக்குநர் ஷங்கர் தன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது அறிக்கையில் கூறுகையில் எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
எனது வழக்கறிஞர் சாய்குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.
இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும் நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.