உதயநிதிக்கு ஆதரவு சொன்ன வெற்றிமாறன்.. அவர் பேசியதை முழுமையாக கவனித்தீர்களா.. அதுதான் ஹைலைட்
சென்னை: இந்தியா என்ற பெயரே போதுமானது.. அதுவே சரியானதாகவும் உள்ளது. சனாதனம் குறித்து பேசிஇருக்கக்கூடிய உதயநிதியுடன் அனைவரும் நிற்க வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
சென்னையில் தமிழ் ஸ்டூடியோ சார்பில் பியூர் சினிமா புத்தக அங்காடி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், புத்தக அங்காடியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன, புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். புத்தகம் வாசிப்பதால் மனதில் பக்குவம் ஏற்படும் என்றும், நம்மை மேம்படுத்த புத்தகங்கள் அவசியம் என்றும் கூறினார்.
இப்போதைய காலகட்டத்தில் அனைவரும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்திய வெற்றிமாறன், சினிமாவில் இருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் சமூகத்தை நோக்கி நகரும் சினிமாவாக தமிழ் சினிமா உள்ளதால். கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும். கல்வி மூலமாகவே நாம் பழக்கி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் இருந்து விடுபட முடியும் என்றார்.
உதயநிதி சனாதனம் குறித்து பேசியதை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் பிறக்கின்ற எல்லோருக்கும், எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அதுவே பிறப்புரிமை. அதை மறுக்கும் எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும், அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலையை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய கடமை ஆகும்.'
அதைப்பற்றி பேசிய உதயநிதியுடன் நாம் அனைவரும் கண்டிப்பாக நிற்க வேண்டும். நானும் உதயநிதிக்கு ஆதரவாக நிற்கிறேன், நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கு என்ன காரணம் என்றால், நமக்கு இதுவரை தவறாகக் கற்பிக்கப்பட்டுள்ள விடுதலையிலிருந்து, வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்.
இந்தியா, பாரத் பெயர் விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், "எனக்கு இந்தியா என்ற பெயரே போதும், அதுவே சரியானதாக உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய விருது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன், "தேசிய விருது பற்றி எனக்கு வேறுவிதமான கருத்துகள் உள்ளது. மற்றவர்கள் பேசுவதில் இருந்து எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. நம்முடைய படத்தை ஒரு விதமான தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வுக் குழுவின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டே படத்தை நாம் அனுப்புகிறோம்.அந்த படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம்.
ஆனால் அந்த படத்துக்கு விருது கிடைக்குது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வுக் குழுவின் முடிவுதான். அந்த முடிவு படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிக்காது.
ஜெய்பீம் படம் வந்த பிறகு, அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கின்றது என்பது படத்தின் தாக்கத்தைப் பொறுத்து இருக்கிறது. அந்தப்படம் என்ன செய்யவேண்டும் என அவர்கள் எடுத்தார்களோ அதை நிகழ்த்திவிட்டது. விருது என்பது கூடுதல் அங்கீகாரம். படத்தின் தரத்தை தேர்வுக்குழு தீர்மானிக்க முடியாது.
ஒரு தேர்வுக்குழுவில் உள்ள ஒருவரின் விருப்பு வெறுப்பு, அந்த குழுவின் விருப்பு வெறுப்பாக இருக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜூரியாக சென்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு நிறைய விருது கிடைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது என்றார்.
உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்று சாமியார் ஒருவர் விலை நிர்ணயித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றி மாறன், "அது தான் வன்முறையைத் தான் தூண்டுகிறது" என்றார். விடுதலை இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, "விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி விடும். கிட்டத்தட்ட பணிகள் முடிந்து விட்டது" என்றார்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், சனாதனம் சர்ச்சை தொடர்பான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் பேசிய கருத்துகளை பாஜகவினர் திரித்து அவதூறு பரப்பி வருகின்றனர். எனக்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சித் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி. 'பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications