சென்னை புத்தக கண்காட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிப்புக்கு சீமான் காரணம்-டிஸ்கவரி புக்பேலஸ்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பட்டு புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஸ்கவரி புக் பேல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேடியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக 'டிஸ்கவரி' வேடியப்பன் அளித்த விளக்கம்: சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று காலை சீமானை, நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில் பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, அரங்கு அமைத்துக் கொடுத்தோம். அரசியல் தாக்குதல், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக் கூடாது என்கிற அறிவுறுத்தலுடன் அரசியல் பாரபட்சம் இல்லாமல் பபாசி (புத்த கண்காட்சி நடத்தும் அமைப்பு) இதற்கான அனுமதியை வழங்கியது. பபாசியில் ஒரு உறுப்பினர், செயற்குழுவில் செயலாற்றியவன் என்பதால் சீமானிடமும் இது தெரிவிக்கப்பட்டது.

விழா மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் பார்த்துக் கொண்டார். சீமானின் விருப்பத்தின் பேரில் பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே பாடல் ஒலிக்கப்பட்டது. பாரதிதாசன் பாடல் என்பதால் இதை நான் எளிதாக எடுத்துக் கொண்டேன்.
ஆனால் இந்த பாடல் புதுச்சேரி அரசின் வாழ்த்து என்றோ இதன் மூலம் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்படுகிறது என்கிற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது என் அறியாமைதான். அதற்காக வருந்துகிறேன்.
மேலும் சீமான், நல்ல ஒரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துகள் எனக்கோ எங்களின் பபாசி அமைப்புக்கோ விருப்பம் இல்லாதது; நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை. பொதுமேடையில் சீமான் பேசும்போது குறுக்கிடுவது நாகரிகம் இல்லை என்பதால் அமைதி காத்தோம்.
இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகளாக அரசியல் சார்பற்று வாசிப்பை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். எதிர்பாராமல் நடந்த சம்பவத்துக்கு ஒட்டுமொத்தமாக எங்கள் இலக்கியச் செயல்பாடுகளை முடக்க திட்டமிடுவது வருத்தத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு டிஸ்கவரி வேடியப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பில் சீமான் தீவிரம்
தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் 'திராவிடர் நல் திருநாடு' என்ற வரிகள் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பாடலை அண்மைக்காலமாக சீமான் புறக்கணிப்பதை திட்டமிட்டே செய்துவருகிறார்; நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் என எதில் சீமான் பங்கேற்றாலும் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது; இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் நிகழ்ந்துள்ளது என்கின்றனர் பதிப்பாளர்கள்.












Click it and Unblock the Notifications