சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்.. பேரவையில் எடப்பாடி- அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்!
சென்னை: சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அரசினர் தனித்தீர்மானத்தை முதல் அமைசர் முன்மொழிந்தார். பின்னர் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி " ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்" என்று பேசினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை. திருப்பி அனுப்பி வைத்துள்ளார்" என்றார். அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, "ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்" என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், நாளைக்கு வழக்கு விசாரணைக்கு வரும் போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டேன் என ஆளுநர் கூறுவார். அதனால்தான், இன்றே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
அதேபோல், ஆளுநர் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கவே இந்த முடிவை தமிழக அரசு முடிவெடுத்துள்ளது" என்று அமைச்சர் பொன்முடி பேசினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்ப்பு தெரிவித்தது என்றும், இப்போது ஆளும் கட்சியில் இருக்கும் போது இதனை கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறீர்கள். அப்போதும் இதே நடைமுறை தான் இருந்தது. ஆனால் அன்று திமுக எதிர்த்தது. இப்போது ஆதரிக்கிறது. அதாவது ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு.. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை நிலைப்பாடு போடுகிறது என பேசினார். இவ்வாறு அவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications