மொட்டை கடிதத்தால் பறி போன வேலை.. 20 வருடத்திற்கு பின் காவலருக்கு நிம்மதி கொடுத்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: தமிழக காவல்துறையை விமர்சித்து மொட்டை கடிதம் எழுதிய போலீசை பணி நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். காவல்துறை நடவடிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்ட காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1994 ஆம் ஆண்டு காவலராக பாலச்சந்திரன் என்பவர் பணியில் சேர்ந்தார். இவர் மீது தமிழக காவல்துறையை விமர்சித்து மொட்டை கடிதம் எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, அடிமைத்தனத்தில் இருந்து தமிழ்நாடு காவல்துறையை மீட்டெடுக்க வேண்டும் - போலீஸ்காரர்கள் கொந்தளிப்பு என அடையாளம் எதுவும் வெளிப்படுத்தாமல் மொட்டை கடிதம் எழுதியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கடிதம் கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, குறிப்பிட்ட அந்த கடிதத்தை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். அதில், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து காவலராக பணியாற்றி வரும் பாலச்சந்திரனுடையது என்று உறுதியானது. இதையடுத்து, பாலச்சந்திரன் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2001 ஆம் ஆண்டு பாலச்சந்திரனை பணியில் இருந்து நீக்கி எழும்பூர் ஆயுதப்படை துணை கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை காவல்துறை உயர் அதிகாரிகளும் செய்தனர். காவல்துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு முதலில் விசாரணை நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில் வைத்த வாதத்தில், 'கமாண்டோ போலீசாருக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கப்படுவதாகவும், போலீசாரை அடிமை போல் நடத்தப்படுவதாகவும், அதனால் காவல்துறை சங்கம் தொடங்க வேண்டும் என்று மனுதாரர் மொட்டை கடிதம் எழுதியுள்ளார்" என்று வாதிடப்பட்டது. மனுதாரர் பாலச்சந்திரனை டிஸ்மிஸ் செய்த உத்தரவை தனி நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட காவலர் பாலச்சந்திரன் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், மொட்டை கடிதம் எழுதியதற்காக பணி நீக்கம் செய்வது என்பது அதிகபட்ச தண்டனையாக உள்ளது என வாதிடபட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ததோடு 6 வாரத்திற்குள் பணி வழங்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மொட்டை கடிதம் எழுதியற்கு மனுதாரர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஒரு காவலர் தன் துறை மீது கடுமையான விமர்சனம் செய்து மொட்டைக்கடிதம் எழுதியதால், காவல் துறை மீது களங்கத்தை ஏற்படுத்தியதாக கூறி அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர். இது கடுமையான தண்டனையாக கருதுகிறோம். அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், வேறு வேலைக்கு செல்லவில்லை. காவல்துறை வேலைக்காக இந்த உயர் நீதிமன்றத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அணுகி போராடி வருகிறார்.
எனவே, அவரை பணி நீக்கம் செய்த காவல் அதிகாரிகளின் உத்தரவுகளையும், தனி நீதிபதி தீர்ப்பையும் ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 6 வாரத்துக்குள் மீண்டும் காவல்துறை வேலை வழங்க வேண்டும். அவர் பணி நீக்கம் செய்த நாளில் இருந்து இதுவரை ஊதியம் எதுவும் கோர முடியாது. ஆனால், இந்த காலத்தை ஓய்வூதியத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications