கடலில் கலந்த எண்ணெய் கழிவு.. கறார் காட்டிய பசுமை தீர்ப்பாயம்! களமிறங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை: மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.
இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதாவது மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் சத்யஜித், "இது எண்ணெய் கசிவு கிடையாது. எண்ணெய் தடயங்கள்தான்(Traces Of Oil)" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், "நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்" என்று கேள்வியெழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில், எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியில் சுமார் 20 ச.கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தது. இது இந்த விவகாரம் தொடர்பான தீவிரத்தன்மையை மேலும் அதிகரித்திருக்கிறது.
தற்போது கடலில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3 ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயன பவுடர்கள் தூவி 10 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications