பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- பதவி பறிபோனது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன?
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்துவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.

வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.
மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார்.
தொடர்ந்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார். அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார்.தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், எம்பி- எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்பு தொடர்பாக என்ன சொல்கிறது?
* மக்கள் பிரதிநிதிகளாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதவிகள் வகிப்பது, மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது, திவாலாகி இருப்பது ஆகியவற்றால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
* கட்சித் தாவல் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பதவி பறிக்கப்படலாம்.
* மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8-ன் கீழ் பதவியில் இருக்கும் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள், சட்டசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள், சட்டமேலவை உறுப்பினர்களான எம்.எல்.சிக்கள் ஆகியோர் கிரிமினல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு; 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்- பதவி பறிக்கப்படலாம். இத்தகைய நபர்கள் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
* அரசு ஒப்பந்தங்களில் தலையீட்டு குறுக்கீடு செய்தால் பதவி பறிக்கப்படும்
* தேர்தல் காலத்தில் செலவுகளை முறையாக தாக்கல் செய்யாமல் போனால் பதவி பறிக்கப்படும்.
* அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4)-ல் தண்டனை பெற்ற நபர் தீர்ப்பு வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகிறது. இதனை லில்லி தாமஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications