10.5% இட ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசின் செயல்பாட்டால் அதிருப்தியா? - வேல்முருகன் சொன்ன பதில்!
சென்னை : திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

10% இட ஒதுக்கீடு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், "மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காமலேயே உயர்சாதினருக்கு 10% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. 21 உயிர்களை தியாகம் செய்து 108 சாதிகளுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் நாங்கள். எனினும் அந்த இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை அரசு முன்னெடுத்தால் எங்களுக்கான சமூக நீதி கிடைக்கும்.

வன்னியர்களுக்கு
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் சரியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீட்டில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை நடத்த வேண்டும்." எனத் தெரிவித்தார்.

திமுக அரசு மீது அதிருப்தியா?
10.5% இட ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், "முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு மந்தமாக செயல்படுத்தப்படுகிறது. அதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் நான் இது பற்றி கோரிக்கை வைத்தபோது தமிழக முதல்வர் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சாராதவர்களுக்கு பணி
எங்களின் கோரிக்கை உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது தான். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல சாதியினர் தமிழ் சமூகத்தைச் சாராதவர்கள் அவர்கள் மொத்தமாக தமிழகத்தின் இட ஒதுக்கீடை பெறுகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தை சாராதவர்கள் அரசின் பல்வேறு பணிகளில் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

அக்கறை காட்ட வேண்டும்
நாங்கள் ஒரு சாதிக்கு மட்டும் ஒதுக்கீடு கேட்கவில்லை. சாதிவாரி கணக்கீடு எடுத்த பின்னர் பிற சாதிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்போம். இந்த புள்ளி விவர கணக்கை மாநில அரசு நினைத்தால் 3 வாரத்தில் செய்யலாம். மத்திய அரசும் இதற்கு நிதி உதவி செய்ய முடியும். திமுக அரசு சமூக நீதி அற்ற அரசு என்று கூறவில்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications