ஆட்டம் குளோஸ்! சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைப்பு! அகிலேஷ் யாதவ் அதிரடி!
சென்னை: சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பை கூண்டோடு கலைத்து அதிரடி காட்டியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.
பெயருக்கு கட்சி: முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியானது உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக வலிமையாக உள்ளது. அதே வேளையில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட இன்னும் ஒரு சில மாநிலங்களில் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த சமாஜ் வாதி கட்சியின் நிர்வாக அமைப்பை கூண்டோடு கலைப்பதாக அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளங்கோ யாதவ் என்பவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்தார். இவர் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக தன்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறி 36 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாக அமைப்பு முழுமையாக கலைக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆத்திரமடைந்த அகிலேஷ்: இதனிடையே தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சமாஜ்வாதி கட்சியின் அமைப்பை அகிலேஷ் கலைக்கக் கூடும் என எதிர்பார்கப்படுகிறது. கட்சியின் பெயரையும், தனது பெயரையும் சிலர் தவறாக பயன்படுத்துவது தொடர்பாக புகார்கள் குவிந்ததால் அகிலேஷ் யாதவ் இந்த முடிவை எடுத்திருக்கலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அமைச்சர் ராஜகண்ணப்பன், தேவநாதன் யாதவ் ஆகியோர் யாதவ சமுதாய மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க நபர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
யாதவ் சமுதாய மக்கள்: இவர்களை தாண்டி சமஜ்வாதி கட்சியால் யாதவ சமுதாய மக்களின் நம்பிக்கை பெறுவது தமிழ்நாட்டில் கடினமான விவகாரமாக பார்க்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது சமாஜ்வாதி கட்சியின் தமிழக துணைத் தலைவராக இருந்த சிவபெருமாள் யாதவ், அகிலேஷ் மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்தாண்டு தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். அதேபோல் அகிலேஷ் யாதவுடன் கருத்து வேறுபாடு காரணமாக இன்னும் பலரும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தற்போது விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.
மூடு விழா: இதனால் தான் இனியும் தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு அமைப்பு தேவையில்லை என அதிரடி முடிவை எடுத்து அதை இன்று நடைமுறையும் படுத்தியுள்ளார் அகிலேஷ் யாதவ். விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வந்த சமாஜ்வாதி கட்சிக்கு மூடுவிழா நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications