சென்னை பல்கலைக்கழகத்தில் பிகாம், பிபிஏ பட்டம் வேண்டுமா?.. ரூ 3 லட்சம் வரை லஞ்சம்.. விசாரணையில் பகீர்
சென்னை: தொலைதூர கல்வி மையங்களை நடத்துவோர் ரூ 3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடியாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பெற்றுத் தர முயற்சித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தமிழகத்தில் 1980- 81 ஆம் ஆண்டு முதல் தேர்வில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதன்படி தொலைதூர கல்வி படிப்பில் சேர்ந்து விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்.

சான்றிதழ்கள்
இதில் தேர்வு எழுதி முடித்துவிட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் வழங்குவதற்காக சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு மாணவரின் செமஸ்டர் கட்டணம், தேர்வு கட்டணம், அவர்களது பெயர், விவரம் உள்ளிட்டவைகளை பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர்.

துணைவேந்தர்
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொலைதூர கல்வியில் சேருவதற்கு விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 இல் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆன்லைன் தேர்வு
இதையடுத்து தொலைதூர கல்வியில் சேராமல் ஆன்லைன் தேர்வில் எத்தனை பேர் முறைகேடாக தேர்வு எழுதினர் என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 117 பேர் பிகாம், பிபிஏ பட்டம் பெற முறைகேடாக ஆன்லைன் தேர்வை எழுதியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்ய துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.

முதல் கட்ட விசாரணை
தொலைதூர கல்வி மையங்களை நடத்தி வருவோர் ரூ 3 லட்சம் வரை வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு மோசடியாக சான்றிதழ்கள் பெற்றுத் தர முயற்சித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மோசடியாக சான்றிதழை பெறுவதை தடுத்து நிறுத்தினாலும் அந்த 117 பேரின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை அறிய அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications