Ravi Mohan:ரவி மோகனிடம் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி! சென்னை நீதிமன்றம் போட்ட உத்தரவு
சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது ஆர்த்தி தரப்பில், "மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும்" என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தான், இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.

தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த 3-வது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி சுமூக பேச்சுவார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, ரவியும், ஆர்த்தியும் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 3 முறை சுமூக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.
இதையடுத்து சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து அது தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் முதலாவது குடும்ப நீதிமன்றத்தில் இன்று இருவரும் நேரில் ஆஜர் ஆகினர். நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரவி மோகன் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும்
சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும்" என நடிகர் ரவிமோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆர்த்தி தரப்பில், "மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையுடன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications