விஜய் அண்ணா.. இதையெல்லாம் நீங்க தடுத்து நிறுத்த வேண்டும்.. சத்யராஜ் மகள் திவ்யா வைத்த கோரிக்கை!
சென்னை: எதிர்க்கட்சிகளில் இருக்கும் பெண்கள் மற்றும் தவெகவில் இருந்து விலகிய பெண்களுக்கு மிரட்டல் விடுக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். விஜய் அண்ணாவுடன் எந்தவித சொந்த பிரச்சனையும் தனக்கு கிடையாது என்று கூறியுள்ள திவ்யா சத்யராஜ், அரசியல்வாதியாகவே கேள்வி கேட்பதாக கூறி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாணவர்களுக்கு 3வது கல்வி கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 51 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், என்னை இளைய காமராசர் என்று யாரும் அழைக்க வேண்டாம்.

விஜய் வேண்டுகோள்
அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் யாரும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். தவெக முதற்கட்ட கல்வி விழாவில் விஜய் மாணவர்கள் மத்தியில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசியது கடுமையான விமர்சனத்தை பெற்றது. அதேபோல் விஜயிடம் பரிசு பெறும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அவர்தான் அடுத்த முதல்வர் என்பது போல் தொடர்ச்சியாக பேசி வருவதும் கிண்டலுக்கு உள்ளானது.
கல்வி விருது விழா சர்ச்சை
இன்னும் சொல்லப் போனால் தவெக நிர்வாகிகளால் அழைத்து வரப்படும் பெற்றோரின் பேச்சு செயற்கையாக இருப்பதாக விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் விஜய் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். இதனிடையே தவெகவில் இருந்து விலகிய பெண்களை அக்கட்சி நிர்வாகிகள் கடுமையான விமர்சித்தும், மிரட்டியும் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோவை வைஷ்ணவி
அண்மையில் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி தவெகவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி விலகினார். இதன்பின் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சூழலில் வைஷ்ணவிக்கு தவெக நிர்வாகிகள் மிரட்டல் விடுப்பதாக சொல்லப்படுகிறது.
திவ்யா சத்யராஜ் வீடியோ
இதுகுறித்து திமுக நிர்வாகியும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் விஜய்-க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ள திவ்யா சத்யராஜ், திமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்டணமில்லா மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், டைடல் பார்க் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தவெக மிரட்டுகிறது
மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளவு திமுகவுக்கு மட்டுமே உள்ளது. பாஜக போன்ற பலவீனமான கட்சிகளுக்கு தமிழ்நாட்டை பற்றி எந்த புரிதலும் இல்லை. அதேபோல் தவெக தலைவர் விஜய் அண்ணாவுடன் எனக்கு எந்த சொந்த பிரச்சனையும் கிடையாது. ஒரு அரசியல்வாதியாகவே கேள்வியை கேட்கிறேன். எதிர்க்கட்சிகளில் இருக்கும் பெண்களுக்கும், உங்கள் கட்சியில் இருந்து வெளியில் வந்த பெண்களுக்கும் தவெகவினர் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
விஜய் நிறுத்த வேண்டும்
இதனை அந்த பெண்ணின் தாய் யூட்யூப் சேனில் கூறி புலம்பி இருக்கிறார். உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பதை போல் அவங்களுக்கு பாதுகாவலர்கள் இல்லை அண்ணா. தவெகவின் தலைவராக இதனை விஜய் அண்ணா நிறுத்த வேண்டும். ஒரு நல்ல அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் மீது ஆசை கொண்டிருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications