தீபாவளி பண்டிகை! அரசு மருத்துவர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 24 மணி நேரம் பணியில் இருக்க உத்தரவு
சென்னை: அக்.20ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ காயங்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதற்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர சேவை ஊழியர்கள் முழுமையாக பணியில் இருக்க வேண்டும். இந்த உத்தரவு நாளை மற்றும் தீபாவளி நாளன்று ஆகிய இரண்டு தினங்களுக்கு பொருந்தும். மாவட்டத்திற்கும் நகரத்திற்கும் உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், முதன்மை சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள் ஆகிய அனைத்திலும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக செயல்பட வேண்டும். பட்டாசு வெடிப்பு தீக்காயம், கண் காயம், சாலை விபத்து, உணவு பாதிப்பு போன்ற எந்த வித அசம்பாவிதங்களும் இருந்தாலும் அதற்கான முதல் நிலை மருத்துவ சேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் தேவையான மருந்துகள், ட்ரெஸ்ஸிங் பொருட்கள், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் ரத்த வங்கிகள் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் அல்லது நகரத்திலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் அல்லது விபத்துக்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக மாநில பொது சுகாதாரத் துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்க வேண்டும்.
அசம்பாவிதங்கள் அல்லது தீ விபத்துக்கள் குறித்த தகவல்களை, மாவட்ட மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டுறவு சுகாதார இயக்குனர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அரசு தரப்பில் மருத்துவ வசதிகள் பயன்படுத்தப்பட்டாலும் பொதுமக்களும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications