Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது ஆங்கிலேயர்தான் ஜாதியை உருவாக்கியதா? அப்ப மனு தர்மம்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கேள்வி

ஜாதிய கட்டமைப்பு தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை விமர்சிக்கிறார் தி.க. தலைவர் கி.வீரமணி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலேயர்களால்தான் இந்தியாவில் ஜாதிய கட்டமைப்பு உருவானதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி கூறியதாவது: ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டு, அந்தந்த மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஓர் அரசு ஊழியர். இந்திய அரசமைப்புச் சட்டப்படி அவர் அந்த மாநிலத்தின் ஆளுமைக்கான ஓர் அடையாள முகம். ''By Order of the Governor'' - ''ஆளுநரின் ஆணைப்படி'' என்பது ஓர் அரசமைப்புச் சட்டப்படியான சம்பிரதாயம். அதன் உண்மையான ஆட்சி - ஜனநாயகத்தில் முதலமைச்சரும், அவரது அமைச்சரவையுமே! அண்மையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தபடி, ''ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது'' ''ஆட்சி அமைக்கப்படும்போது, பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவது மட்டும்தான் ஓர் ஆளுநரின் பணி.'' ''ஆளுநர்கள் அரசியல் கட்சி, கூட்டணிகள் குறித்துக்கூட பேசக்கூடாது.'' அதுபோலவே, ''அரசமைப்புச் சட்டப்படி தம்மிடம் ஒப்புதலுக்கு வரும் மசோதாக்களை ஏற்கலாம்; சந்தேகமிருந்தால், விளக்கம் கேட்கலாம்; திருப்பி அனுப்பலாம். காலவரையின்றி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் பல மாதங்கள் கிடப்பில் போட்டு வைத்திருப்பது சட்ட விரோதம்'' என்பதை பஞ்சாப் ஆளுநர் ஒருவர்பற்றியும் முந்தைய தீர்ப்பு (ஷெர்சின் vs அரசு) கூறியுள்ளது.

DK Veeramani opposes Governor RN Ravi comments on Caste System

தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு, வந்த நாள் முதல் இந்த நாள் வரை ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி, மாநில அரசுக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாகவும், தான் ஒரு பச்சையான ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் போன்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பேசி, ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவதுடன், உண்மைக்கு மாறான ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரச்சார கோயபெல்ஸ் அவதாரக் - குரலோடு பேசி வருகிறார். ஏதாவது குறுக்கு வழிகளைக் கையாள முடியுமா? என்று முயற்சிக்கிறார்கள்! தமிழ்நாட்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் கொதித்துக் கொண்டுள்ளனர். இதனால், ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தி, ''சட்டம் - ஒழுங்கு சரியில்லை'' என்று போலி காரணம் கூறி, மக்களால் தேர்வு செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் ஆட்சி செய்து, அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் வருவதற்குமுன் என்ற நிலைக்குப் பதிலாக, ஏதாவது குறுக்கு வழிகளைக் கையாள முடியுமா? அதற்குமுன் அஸ்திவாரம் இல்லாது கட்டாந்தரையில் பிடுங்கி நடதப்பட்ட ''தாமரைச் செடி''க்குத் தண்ணீர் ஊற்றும் பணியை இங்குள்ள அடமானம் வைத்தவர்களைக் கொண்டே சாதிக்க ஒரு வியூகம் வகுக்கிறார்கள். அதற்காக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் போன்று நாளும் தமிழ்நாட்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அவ்வப்போது கூறி, எங்கோ ஒரு சில இடங்களில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை (Stray Incidents) 'பூதாகாரமாக்கி''க் காட்டிடும் பொய்மான் வேட்டையில் இறங்கத் துடிக்கிறார் ஆளுநர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் ஜாதி வெறியர்களின் வேலை - கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் ஒரு குடும்பச் சண்டை, குழாயடிச் சண்டையாகத் தொடங்கி, கொலையில் முடிந்ததை ஊதிப் பெருக்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குரலைப்போலவே, இராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பற்றி திசை திருப்பும் போலிப் புலம்பலோடு நாடகம் நடத்துகிறார் ஆளுநர்! அதுமட்டுமல்ல! சட்டம் - ஒழுங்குபற்றி அமைச்சரவை தயாரித்த உரையை அப்படியே சட்டமன்றத்தில் படிக்காமல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களையும் படிக்காமல், அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாடு போன்ற பகுதிகளையும் விட்டுவிட்டு, ஆளுநர் சட்டப்பேரவையில் பேசியது திட்டமிட்டே செய்யப்பட்டது என்பது, அவரது பின் நடவடிக்கைகள்மூலம் தெளிவாகவில்லையா? இறுதி அதிகாரம் மக்களிடமே தவிர, வேறு எந்த அமைப்பிற்கும் இந்நாட்டு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது! இந்நிலையில், தினமும் எங்கேயாவது சென்று, கதாகாலட்சேபம் செய்யும் பாகவதர்போல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உண்மைக்கு மாறான செய்தியைப் பேசி, மக்களின் ஆத்திரத்தினைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிகளை மறைமுகமாகத் தூண்டிவரும் வேலையில் ஈடுபடுகிறார்.

21.2.2023 அன்று ஆளுநர் மாளிகையில், மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, உண்மைக் கலப்பற்ற செய்தியைப் பேசியுள்ளார். ''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஜாதி, இனம் எனப் பிளவுபட்டுள்ளது'' என்று பேசியிருப்பது இமாலயப்புரட்டு ஆகும். ஆளுநரைக் கேட்கிறோம் - பதில் சொல்லட்டும். ஆங்கிலேயர் காலத்திலா ஜாதி, இனம் ஏற்பட்டது? ரிக் வேதத்தில் - புருஷ சுத்தத்தில் நால்வருண ஜாதிபற்றி குறிப்பிட்டுள்ளதை மறுக்க முடியுமா? மனுதர்மத்தில் உள்ளதை மறைக்க முடியுமா? பகவத் கீதையில் கிருஷ்ணன், ''சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம்'' - ''நான்கு ஜாதிகளை நானே உருவாக்கினேன்'' என்று பகவான் கிருஷ்ணனே கூறியதாக உள்ளதே! ''வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்'' என்ற சுலோகத்தை எழுதியது பிரிட்டிஷ்காரனா?

இனம்பற்றிப் பேசுகிறதே மனுதர்மத்தின் பத்தாவது அத்தியாயம், 44 ஆவது சுலோகம் என்ன கூறுகிறது ''பவுண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், பாரதம், பாலஹீகம், சீநம், கிராதகம், தரதம், கசம், இந்தத் தேசங்களையாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.'' இது எந்த பிரிட்டிஷ்காரனால் எழுதப்பட்டது? பாகவத புராணத்தை ராபர்ட் கிளைவ்வா எழுதினார்? அண்டப் புளுகு, ஆகாசப்புளுகுப் பிரச்சாரப் பிண்டங்கள் பதில் அளிப்பார்களா? இந்தியா என்று பெயர் அதற்குண்டா? ஆரியவர்த்தம் என்று பிரித்து எழுதியது மனுஸ்மிருதியே! இரண்டாம் அத்தியாயம் சுலோகம் 22 இல் (பக்கம் 19 இல்) உள்ளதே!

சுலோகங்கள் பிரிவு 22 மட்டுமல்ல -23, 24, 25 காண்க - இப்படி விஷமத்தனமான பிரச்சாரம் இனியும் வேண்டாம்! பிரிட்டிஷ்காரர்கள்தானே, உடன்கட்டை ஏற்றப்படும் ''சதி''க்கு எதிராக சட்டமியற்றித் தடுத்தார்கள்! உங்கள் சனாதனம் சதி மாதாக் கோவில் கட்டியதே! ராஜஸ்தானின் ரூப்கன்வார் - சதிமாதாக் கோவில் அதற்குப் பிறகும்கூட வந்ததே! இதுதான் பாரதக் கலாச்சாரப் பெருமையா? இராமாயணத்து சம்பூகன் கதையும், மஹாபாரதத்தில் துரோணாச்சாரி, ஏகலைவன் கதையும் ஜாதி, வருணாசிரமத்தின் படுகொலை, வன்கொடுமை அல்லவா? ஆளுநர் பதவியிலிருந்து பேசுவது தவறல்லவா? இப்படிப்பட்ட பித்தலாட்டம் பேசுவது - அதுவும் ஆளுநர் பதவியிலிருந்து பேசுவது தவறல்லவா? இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+