10 ஆண்டுகளுக்கு பின் பழம் நழுவி பாலில் விழுந்தது.. திமுக கூட்டணியில் தேமுதிக? அடுத்த வாரம் அறிவிப்பு
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக - தேமுதிக இடையிலான கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது. தேமுதிக தொடங்கியதில் இருந்து இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததே கிடையாது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்வி எழுந்தது. ஜனவரி 2வது வாரத்திலேயே தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், திடீரென பின் வாங்கினார். தற்போது தேமுதிகவின் இல்லம் தேடி உள்ளம் நாடி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைத்தார். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கோரி இருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. திமுக பாணியில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு உத்தரவாதம் மட்டுமே அளிப்போம் என்று தெரிவித்திருந்தார். இதனால் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் விஜயபிரபாகரனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் திமுகவிடம் கோரினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் தலையசைக்க, பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக - தேமுதிக கூட்டணி அறிவிப்பை வெளியிட இரு தரப்பும் முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாகவே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்திருக்கிறார்.
விஜயகாந்தின் தாய் பெயர் ஆண்டாள். 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியை தேமுதிக உறுதி செய்த போதும், ஆண்டாள் கோயிலில் தரிசனம் மேற்கொண்டிருந்தார். 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நம்பிக்கையுடன் இருந்தார். பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்றெல்லாம் கருணாநிதி பேசி இருந்தார்.
ஆனால் விஜயகாந்த் திடீரென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இதனால் 2016ல் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின் பழம் நழுவி பாலில் விழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே திமுக கூட்டணியில் இணைந்ததில்லை. இதனால் முதல்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையவிருக்கிறது.












Click it and Unblock the Notifications