நள்ளிரவை தாண்டியும் சாரை சாரையாக வந்த தொண்டர்கள்.. கண்ணீருடன் ஆறுதல் சொன்ன பிரேமலதா
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நள்ளிரவைத் தாண்டியும் சாரை சாரையாக தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71. செயற்கை சுவாசத்துடன் போராடிய விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமான நிலையில் அவருடைய உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து நேற்று பிற்பகல் 1 மணி முதல் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி பேதமின்றி மற்ற கட்சியின் தொண்டர்கள் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தாய்க்கு பின் தாரம் என்போம்.
அது போல் விஜயகாந்த் சினிமாவில் நடித்த காலம் முதல் நேற்று காலை உயிர் பிரிந்தது வரை கூடவே இருந்து அவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தவர் பிரேமலதா. இவர் ஆம்புலன்ஸில் வந்தது முதல் கணவரின் கன்னத்தை தொட்டு பார்த்து பார்த்து அழுதுக் கொண்டிருந்தார். அது போல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட போதும் அவர் ஓயாமல் அழுது கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவைத் தாண்டியும் ஏராளமான தொண்டர்கள் வந்து கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் என வரிசையில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பிரேமலதாவை கட்டி பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். சளைக்காமல் ஒவ்வொருவருக்கும் பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார்.
அது போல் தொடர்ந்து விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும், பிரேமலதாவும் கண்ணீர் விட்டவாறே இருந்தனர். பிரேமலதா கால் கடுக்க அழுது அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். நள்ளிரவில் குழந்தைகள் எல்லாம் வந்த போது அங்கிளை பாரு என அழைத்து காட்டி, அவர்களின் கன்னத்தில் தட்டி நெகிழ்ந்தார்.
அது போல் கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு விஜய பிரபாகரனும் ஆறுதல் தெரிவித்தார். அவரை சின்ன கேப்டன் கலந்காதீர்கள் என தொண்டர்களும் ஆசுவாசப்படுத்தினர். பிரேமலதா கணவரின் முகத்தை அவ்வப்போது பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார்.
நள்ளிரவில் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் வருகை தந்தனர். விஜய் கண்ணீர் மல்க கேப்டனை பார்த்து அஞ்சலி செலுத்தினார். முடித்துவிட்டு சென்ற போது என்ன தோன்றியதோ மீண்டும் எப்போது பார்ப்போமோ என்ற நினைத்தபடியே 10 வினாடிகள் நின்று விஜயகாந்தின் உடலை பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications