கூட்டணி ஆட்சி கண்டிப்பா தமிழ்நாட்டில் வரணும்.. பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த சிக்னல்! யாருக்கு?
சென்னை: "கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அதன் நிறை குறைகள் தெரியும்" என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், திமுகவும், அதிமுகவும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், மற்ற கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தேமுதிகவின் தலைவரான மறைந்த விஜயகாந்திற்கு தமிழ்நாட்டில் தனி செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தேமுதிகவின் வாக்குகளாக களத்தில் உள்ளது. தற்போது தேமுதிக சரிவுப் பாதையில் இருந்தாலும் அவர்களை கூட்டணிக்கு இழுக்க முன்னணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி பிரேமலதாவைச் சந்தித்தார். தேமுதிக தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. தேமுதிகவை தங்களது கூட்டணியில் கொண்டு வர தவெகவும், திமுகவும் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை தனது அண்ணன் எனக் குறிப்பிட்டுப் பேசினார். இதையடுத்து, விஜய்யை தமது தம்பியாகப் பார்ப்பதாகக் கூறி இருந்தார் பிரேமலதா. முன்னதாகவே, ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்றும் கூறி இருந்தார் விஜய்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என தொடர்ந்து உறுதியாகக் கூறி வருகிறார். அண்மைக்காலமாகவே கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் அரங்கில் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அதன் நிறை குறைகள் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத தேமுதிக, கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகத் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் தான் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications