'விட்றாதீங்க'.. கேப்டனின் 'திடீர்' எனர்ஜி.. '60'க்கும் பறந்த 'ஒரே' உத்தரவு.. வேற லெவல்
சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேமுதிக முன்பை விட மிக ஆக்ரோஷமாக தேர்தல் பணியாற்றத் தொடங்கியுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் அந்த 'பூஸ்ட்' நம்மையும் நெகிழ வைக்கிறது.
வாய்ஸ் என்றாலே விஜயாகாந்த்.. இன்று அந்த 'வாய்ஸ்' முடங்க, அரசியல் களத்தில் வாய்ஸ் இன்றி திக்கற்று போய் கொண்டிருக்கிறது தேமுதிக. 2019 லோக் சபா தேர்தல் வரை, விஜயகாந்த் வீட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழ். 'எங்களை மதிக்கவில்லை' என்று அதிமுக கூட்டணியில் இருந்து கோபித்துக் கொண்டு வெளிவந்த தேமுதிக, வேறுவழியின்றி டிடிவி தலைமையை ஏற்றுக் கொண்டு, அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 இடங்களில் போட்டியிடுகிறது.
ஷாக் தந்த ரிப்போர்ட்
சரி.. எப்படியோ 60 இடத்தில் நிற்கிறோம்... மற்றதை புறந்தள்ளி வைத்து, தேர்தலில் கவனம் செலுத்துவோம் என்று கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் தேமுதிக தலைவர்கள். இந்த நிலையில் தான், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்தபோது, அவருடன் தம்பி எல்.கே.சுதீஷ் சென்றிருந்தார். அப்போது, உடல்நிலை சோர்வு ஏற்பட்டதால் சென்னை திரும்பிய அவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொறுப்பும், சுமையும்
குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு சுதீஷ் ஓய்வில் இருப்பார் என்பதால், பல இடங்களில் அவர் செய்யவிருந்த பிரசாரங்கள் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இது தேமுதிகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உடல்நிலை காரணமாக, விஜயகாந்த் இப்போது ஆக்டிவ் அரசியலில் இல்லை என்பதால், மைத்துனர் சுதீஷ் தான் பெரும்பாலான பொறுப்புகளை கவனித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், பெரும் சுமையை அவர் சுமந்து வருகிறார்.
பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்
ஆம்! தொடக்கத்திலேயே கட்சிக்கான வலுவான கட்டமைப்பை விஜயகாந்த உருவாக்கி வைத்திருந்தார். அவ்வளவு சீக்கிரம், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விட முடியாது. இன்று வாக்குவங்கி அடிப்படையில், தேமுதிகவிற்கு அதிமுக அதிக முக்கியத்துவம் தரவில்லை என்றாலும், இன்றளவும் தேமுதிகவின் கட்டமைப்பு பலமாகவே உள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், 'பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்.. பில்டிங் வீக்'!.
எனர்ஜி உத்தரவு
இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சீமான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், விஜயகாந்த் ஓய்வில் இருப்பதால், பம்பரமாய் சுழன்று வேலைப்பார்த்த சுதீஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது எந்த வகையிலும், கட்சியின் தேர்தல் பணிகளை பாதித்துவிடக் கூடாது என்பதில் விஜய்காந்த் தெளிவாக உள்ளாராம். இந்த நிலையில், தேமுதிக தலைமையில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அந்த எனர்ஜி கலந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாம்.
பணிகள் ஜரூர்
அதில், நாம் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் நானே நேரடியாக போட்டியிடுவதாக நினைத்து வேலை செய்யுங்கள் என்ற தகவல் பறந்திருக்கிறதாம். குறிப்பாக, நமக்கு விடப்பட்ட சவால் இந்த தேர்தல் என்றும், நம்மை ஓரம்கட்ட நினைத்தவர்களுக்கு நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால், லைட்டாக சோர்ந்திருந்த நிர்வாகிகள், தேர்தல் வேலைகளை முடுக்கிவிட, பணிகள் ஜரூராக மீண்டும் நடைபெற்று வருகிறதாம்.
வருவாரா விஜயகாந்த்?
இதுகுறித்து நாம் மூத்த பத்திரிக்கையாளர் திரு.செல்வராஜிடம் பேசினோம். அவர் கூறுகையில், "தொண்டர்களுக்கு இந்த டானிக் மட்டும் போதாது. விஜயகாந்த் நேரில் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், அவரது தற்போதைய உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனினும், விஜயகாந்த் நிச்சயம் பிரசாரத்திற்கு வருவார் என்றே தகவல் தெரிவிக்கின்றன. விருத்தாச்சலத்தில் பிரசாரத்தை தொடங்கி மதுரை வழியாக கோவில்பட்டி வரை சில தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அவரால் அதிகம் பேச முடியாது என்பதால், மிகச் சுருக்கமாக பேசி பிரசாரத்தில் ஈடுபடலாம்" என்றார்.
2021 தேர்தல் என்ன தலையெழுத்தை எழுதப் போகிறது என்று பார்ப்போம்.