பாஜகவுடன் சேருதா தேமுதிக? அண்ணாமலை உடன் மீட்டிங்? “இடிக்குதே” விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் கூட்டணி கணக்குகளை போடத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் இந்த தேர்தலிலும் கொண்டு செல்லும் திட்டத்தில் உள்ளது திமுக. அதோடு, தேமுதிக அல்லது பாமக கட்சிகளில் ஒன்றை கூட்டணியில் சேர்க்கும் திட்டத்தில் திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் அதிமுக இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக தரப்பு, இந்த முறை, திமுக - அதிமுக அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியுடன் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. சில சிறிய கட்சிகள் பாஜகவுடன் இணக்கமாக இருந்து வரும் நிலையில், தேமுதிக, பாமக, அமமுவை தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கட்சிகளுக்கு பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருப்பதால், நல்ல பலன் கிடைக்கும் என பாஜக தலைமை கருதுகிறதாம்.
இந்தச் சூழலில் தான் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளதாகவும், பாஜக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஏற்கனவே, 2014ஆம் ஆண்டில் பாஜகவுடன் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தன. அந்த கூட்டணி மீண்டும் அமையப்போவதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்திக்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் பத்திரிக்கையை கண்டிக்கிறேன். இதுபோன்ற செய்தியை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அதுவரையிலும் இதுபோன்ற வதந்திகளை பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த பணிகளையும் தேமுதிக தொடங்கவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி, யார் வேட்பாளர், எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்ற அறிவிப்பை ஜனவரியில் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். 40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications