ஜெயலலிதா செய்த வேலை.. விஜயகாந்த் திருமண மண்டபத்தை உடைத்த கருணாநிதியா? பார்த்தசாரதி ஓபன் டாக்!
சென்னை: ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது அரசியல் சதிதான் என்று பேசி இருக்கிறார் விஜயகாந்த்தின் அரசியல் உலக நிழலாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி.
தேமுதிக என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் புதியதாகப் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது 'ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்'தான். அங்கே அமைய இருந்த மேம்பாலப் பணிகளுக்காக அந்த மண்டபம் அரசியல் ரீதியாகக் குறிவைக்கப்பட்டது என்பது பலர் பேசினார்கள்.

அதை விஜயகாந்த் கூட குறிப்பிட்டுப் பல பேட்டிகளை அளித்தார். ஆவேசமாக திமுகவினரை விமர்சித்தார். அத்தனை சர்ச்சைகளுக்குப் பின்பும் அந்த மண்டபம் இடிக்கப்பட்டது.
மிகப் பிரம்மாண்டமாக இருந்த இடம் சுருங்கிப் போனது. இன்றைக்கு விஜயகாந்த் துயிலும் கல்லறை அங்குதான் இருக்கிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்தும் ஜெயலலிதா செய்த அரசியல் சதி குறித்தும் பேசுகிறார் பார்த்தசாரதி.

தேமுதிக பிளவுக்கு யார் காரணம் என்ற கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த அவர், பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
"தேமுதிகவில் வேண்டும் என்றே ஒரு பிளவை ஏற்படுத்தினார்கள். கூட்டணிக்காக அதிமுகவுடன் இணைந்தோம். ஆனால், தேமுதிக இவ்வளவு இடங்களை வெல்லும் என்று ஜெயலலிதாகூட எதிர்பார்க்கவில்லை. ஆட்சிக்கு வருவோம் என்று நம்பினார்.
ஆனால், நாங்கள் 45 இடங்களில் 5 அல்லது 10 இடங்களில் வெல்வோம் என்று ஜெயலலிதா நினைத்தார். அவரது கணிப்பைத் தாண்டி விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்தது ஜெயலலிதாவுக்கே மிகப் பெரிய ஆச்சரியம். அவர் தேமுதிக நல்ல அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று அவர் உள்ளுக்குள் நினைத்திருக்கலாம்.

ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் நல்ல நட்புடன்தான் இருந்தார். ஒருமுறை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொல்லி அவரே விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுத்தார். தாஜ் ஹோட்டலில் விருந்து வைத்தபோதுகூட ஒ.பன்னீர்செல்வத்தை விட்டு கேப்டனை அழைத்து வரச் சொன்னார் ஜெயலலிதா. அந்தளவுக்கு நல்ல நட்பு இருவருக்கும் இருந்தது.
ஒருமுறை மனித உரிமை ஆணையத்திற்குத் தலைவரை நியமிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் கையெழுத்துப் போட வேண்டி இருந்தது. அப்போது அந்த விண்ணப்பத்தில் விஜயகாந்த் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டார்.

அப்போதுகூட, 'என்ன விஜயகாந்த் படித்துப் பார்க்காமலே கையெழுத்துப் போடுகிறீர்கள்?'என்று கூட கேட்டார். உடனே கேப்டன், 'நீங்கள் சொல்கிறீர்கள். அந்த நம்பிக்கைதான்' என்று பதில் அளித்தார்.
அப்படி இருவருக்குள் இருந்த அரசியல் நெருக்கத்தைப் பிரிக்க வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள். அதனால்தான் அந்தப் பிரிவு ஏற்பட்டது.
அந்த அம்மாவின் நெடுங்கால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அவர் எப்போது எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்தபோது அந்தக் கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். அது அவரது பழக்கம் அது.

என்னைக்கூட ஆசைகாட்டிக் கூப்பிட்டார்கள். அவர் தேமுதிகவிலிருந்து கூப்பிடாத எம்.எல்.ஏக்களே கிடையாது. அவ்வளவு பேரிடமும் பேசினார்கள். சொல்லப்போனால் தலைவர் விஜயகாந்த்தைத்தவிர எல்லோரையும் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அதுதான் உண்மை. அதில் சிலர் அவர்களின் தேவைக் காக சென்றார்கள். நாங்கள் கடைசிவரை தலைவர்தான் வேண்டும் என்று வைராக்கியமாக இருந்து விட்டோம்.
சென்னையிலிருந்த பெரிய மண்டபம் என்றால், அது விஜயகாந்த் மண்டபம்தான். உள்ளேயே இருக்கைப் போட்டு 1500 பேர் உட்காரலாம். அன்றைய காலத்தில் சிட்டிக்குள் இந்தளவுக்குப் பெரிய மண்டபம் வேறு இல்லை.

அண்ணா அறிவாலயம் அல்லது அதிமுக தலைமை அலுவலகம் கூட இந்தளவுக்குப் பெரியது இல்லை. அந்தளவுக்குச் சிறப்பான மண்டபமாக இது இருந்தது. என்னைப் பொறுத்தளவில் இந்த மண்டபத்தை இடித்தது திட்டமிட்ட சதிதான். அப்படித்தான் பலரும் சொன்னார்கள். நானும் அப்படித்தான் சொல்வேன்.
மண்டபத்தை இடக்க உள்ளதாகப் பேச்சு வெளியானது. அதற்காக அதிகாரிகள் கேப்டனை வந்து பார்த்தார்கள். அவரும் மு.கருணாநிதியைப் போய் சந்தித்தார். மண்டபம் குறித்துப் பேசினார். அன்றைக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கேட்டார். அவர் என் கையில் இல்லை என்று சொல்லிவிட்டார்.

அந்த மண்டபம் பக்கத்திலேயே 7 கிரவுண்ட் நிலம் இருந்தது. அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசாங்கத்திடம் முறையிட்டார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. ஆகவே, யோசித்துப் பார்க்கும்போது அது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்கிறார்












Click it and Unblock the Notifications