விஜயகாந்த் மறைவுக்கு பின் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகியதா? தந்தி டிவி கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து தமிழகத்தில் லோக்சபா தேர்தலை சந்தித்த நிலையில் அந்த கட்சி போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் ஒரு இடத்தில் கூட கருத்துக் கணிப்புகளில் முன்னேறாத நிலையில் இருப்பது விஜயகாந்தின் ஆதரவாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்குமான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது.
இதில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவை திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகும். இதில் விருதுநகரில் விஜய பிரபாகரனும், மத்திய சென்னையில் பார்த்தசாரதியும் கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சையில் சிவநேசன், திருவள்ளூரில் நல்லத்தம்பி ஆகியோர் போட்டியிட்டனர்.
விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அந்த கட்சியினருக்கு ஆதரவு வாக்குகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் அவருடைய மறைவுக்கு கட்சியினரை காட்டிலும் அவருடைய அபிமானிகள், மற்ற கட்சியினர்தான் அதிகம் வந்தனர். மேலும் விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் என்பதால் அந்த விருதுநகரை தேமுதிக கேட்டு வாங்கியது.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் தொகுதிகயில் மாணிக்கம் தாகூர் வென்ற நிலையில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் இந்த முறை மாணிக்கம் தாகூர் தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விஜய பிரபாகரனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றுடன் 7ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மாலைக்கு பிறகு பல்வேறு செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது. அதில் தந்தி டிவி , தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்குமான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது.
அதில் தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் ஒரு தொகுதிகளில் கூட அக்கட்சி முன்னிலை வகிக்கவில்லை என்பது தெரியவந்தது. திருவள்ளூர் தனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது திமுக கூட்டணிக்கே உள்ளது என தந்தி டிவி கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 37.4 சதவீதமும் தேமுதிகவுக்கு 30.1 சவீதமும், பாஜகவுக்கு 15 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டது.
அது போல் தஞ்சையிலும் திமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. தந்தி டிவி கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணிக்கு 42 சதவீதமும் பாஜகவுக்கு 27 சதவீதமும் தேமுதிகவுக்கு 24 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அது போல் கடலூர் தொகுதியில் தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதில் திமுக கூட்டணிக்கு 38 சதவீதம், பாமகவுக்கு 27 சதவீதம், தேமுதிக 23 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 41 சதவீதம், பாஜக 26 சதவீதம், அதிமுக கூட்டணியில் தேமுதிக 22 சதவீதம் வாக்குகளை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அது போல் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு, 36 சதவீதம், தேமுதிக 27 சதவீதம், பாஜக 21 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்லப்பட்டுள்ளது.
தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தேமுதிக இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மற்ற இரு தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் முடிவுகள் வெளியானால்தான் தேமுதிகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதா இல்லை கடந்த காலங்களை போல் இருக்கிறதா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications