மாறி மாறி ஆட்சி செய்தும்.. அதிமுக, திமுக அரசுகள் சென்னையை காப்பாற்றவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக மற்றும் திமுக அரசுகள் முன்னேற்பாடுகள் செய்யாததுதான், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட காரணம் என்று, விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த அறிக்கை வெளியிடுகிறேன்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை மாநகரமே கடல் போல் காட்சியளிக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. சிங்கார சென்னை என அழைக்கப்படும் மாநகரம், 2 நாட்களில் சாதாரண மழைக்கே மூழ்கிவிட்டது.

முன்னேற்பாடுகள் செய்யவில்லை
சென்னையில் 2015ல் ரற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகாவது மாநில அரசு தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுகவும் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை; சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் இல்லாததால் அனைத்து இடங்களும் கடல் போல் காட்சியளிக்கின்றன.

மாறி மாறி புகார்கள்
மேலும், மழை நீருடன் கழியுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும், ஆண்ட கட்சியும், தற்போது ஆளும் கட்சியும் இதுவரை ஆட்சி செய்தும், அதே அவலநியை தான் நீடிப்பதாக பொதுமக்களே புகார் தெரிவிக்கும் நிலை இன்றும் நீடிக்கிறது. எனவே சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

20 செ.மீ மழை
இதனிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகத்தில் நவம்பர் 10,11ஆம் தேதிகளில் 20 செ.மீ.க்கு மேல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்
சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும். மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications