பாராட்டுகள்… நன்றி… வாழ்த்துகள்.. இந்திய விமானப்படைக்கு நம்ம கேப்டன் சொன்னது
Recommended Video
சென்னை:இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அருகே இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம்களை குண்டுவீசி தகர்த்தது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆயிரம் கிலோ அளவிலான வெடிகுண்டுகளை கொண்டு தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை அறிவித்தது.
அறிக்கை வெளியீடு
இந்திய விமானப்படையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தும் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
மோடியை வாழ்த்தும் கேப்டன்
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் நாட்டுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப் படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேமுதிக சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வீரர்கள் தியாகம்
முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில், நமது நாட்டைப் பாதுகாப்பதற்கு தன் உயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்
இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.