தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட்.. திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே எடுத்த ஒரே முடிவு
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் யார் யாருடன் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த கவனத்துடன் காய்நகர்த்தி வருகிறார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளிடமும் தேமுதிக தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் அக்கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் வழங்க முடியும் என தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் திட்டவட்டமாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. இதில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தால் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும். இதுதான் நியதியாக இருந்து வந்தது.

ஆனால் விஜயகாந்த் 2006ம் ஆண்டு அரசியலில் களம் இறங்கிய போது, அன்றைக்கு இருந்த இளைஞர் படை அப்படியே தேமுதிக பக்கம் சாய்ந்தது. இதனால் விஜயகாந்தின் தே.மு.தி.க. 2006-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலே 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும் சாதனை படைத்தது. ஆனால் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
எதிர்க்கட்சி தலைவர்
2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக பாஜக அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று மொத்தம் 7.88 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்த முறை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்குக் கிடைத்தது. ஆனால் வெறும் 3 மாதங்களிலேயே அதிமுக உடனான கூட்டணி முடிவுக்கு வந்தது. விஜயகாந்த் ஜெயலலிதா இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக கூட்டணி முறிந்தது.
மக்கள் நலக்கூட்டணி
அதன்பிறகு விஜயகாந்த்தை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வியூகம் வைத்து முடக்கின. விஜயகாந்த் 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அந்த கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 2.41 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2021 தேர்தல்
அதன்பிறகு விஜயகாந்த்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மொத்த வாக்கு சதவீதமும் 0.43 என குறைந்து போனது.
விருதுநகர் தொகுதி
2023ம் ஆண்டு விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அதன்பிறகு 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் விருதுநகரில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் வெற்றிக்கோட்டை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்கில் தோல்வி அடைந்தார். மற்ற தொகுதிகளிலும் தேமுதிக தோல்வி அடைந்தது.
தேமுதிக தோல்வி
கடந்த முறை 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. என இரு கட்சிகளுடன் தே.மு.தி.க. ஒரு சேர பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தே.மு.தி.க.வின் கோரிக்கையை இரு கட்சிகளும் ஏற்கவில்லை. அதனால் இறுதியாக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அதனால் அப்போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
விஜய் தான் டிமாண்டிற்கு காரணம்
இந்நிலையில் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வை சேர்க்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விரும்புகின்றன. ஏனென்றால் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்று நம்புகின்றன. இதனை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வும் இருதரப்பினருடனும் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தின.
அதிமுக திட்டவட்டம்
அதிமுக தரப்பில் ஒரு எம்.பி. சீட்டு மற்றும் ஒற்றை இலக்கத்திற்குள் சட்டசபை தொகுதி தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டதாம். அதே போல் தி.மு.க.வும் கூறியதாம். இப்படி இரண்டு கட்சிகளுமே சொல்லும் காரணம் என்னவெனில், 'கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. ஒரு சதவீத வாக்கு கூட பெறவில்லை. வெறும் 0.43 சதவீதம் தான் பெற்று இருக்கிறது. மேலும் 60 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த கட்சி பெற்ற ஓட்டு வெறும் 2 லட்சத்து 100 தான் பெற்றது. அப்படி இருக்கையில் கூடுதல் தொகுதிகள் கொடுத்தால் பலன் இருக்காது' என்று கூறுகின்றனவாம்.
எந்த கூட்டணியில் தேமுதிக
தே.மு.தி.க.வை பேச்சுவார்த்தைக்காக கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க. அழைத்த நிலையில், அவர்கள், அஷ்டமி, நவமி என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்த்து வந்தார்களாம். இதன்காரணமாக அ.தி.மு.க., இனி அவர்களாக வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தகல்கள் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை, ' மக்கள் எங்களை விரும்புகிறார்கள். எனவே எங்களுக்கு யார் அதிக சீட்டு தருகிறார்களோ, அங்கு செல்வோம்' என வெளிப்படையாகக் கூறிவிட்டது. இதனால் தேமுதிக எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications