2 தொகுதிகள்... 2 நாட்கள்... பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 2 நாட்கள் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் அந்த தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும், அதிமுகவும் கடுமையாக களப்பணியாற்றி வருகின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் இரண்டு தொகுதிகளிலும் தலா நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி திமுக தலைவர் நாங்குநேரியில் கடந்த 2 நாட்களாக முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டார். சீன அதிபரை நாளை வழியனுப்பி வைத்து விட்டு நாளை மறுதினம் முதல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 15, 16-ம் தேதிகளில் மட்டும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். தொகுதிக்கு ஒரு நாள் மட்டுமே செலவிடுகிறார் பிரேமலதா, இதனால் முழுமையாக மக்களை சந்திக்க முடியாது எனத் தெரிகிறது. இதனிடையே பிரச்சாரத்திற்கு வரும் எண்ணத்தில் இல்லாமல் இருந்த பிரேமலதாவை, அதிமுக தான் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்பின்னர் தான் பிரச்சாரத்திற்கு செல்வது என்ற முடிவை எடுத்துள்ளார் பிரேமலதா. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கு உடல்நலமில்லாத இந்த தருணத்தில் கூட விக்ரவாண்டியில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை நாங்குநேரியிலும் பத்துக்கும் மேற்பட்ட பாயிண்ட்களில் வைகோ பேச இருக்கிறார்.