எல்லா மொழியும் கற்போம்.. இந்திக்கு ஆதரவாக டி ஷர்ட்.. விஜயகாந்த் மகன் வெளியிட்ட போட்டோ.. பரபர!
சென்னை: இந்திக்கு ஆதாரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் டி ஷர்ட் அணிந்து இணையத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். நடிகர்கள், இசையமைப்பாளர்கள் இந்திக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர். இளம் நடிகர்கள், பிரபலங்கள் பலர் இந்த டிரெண்டில் குதித்து உள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர். நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் "ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்" என்ற டி ஷர்ட்டும், இந்தி தெரியாது போடா என்ற டிஷர்ட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

டிரெண்டிங்
தமிழகம் முழுக்க இந்திக்கு எதிரான இந்த டி ஷர்ட் தற்போது ஹிட் அடித்துள்ளது. இந்திக்கு எதிரான இந்த பிரச்சாரத்தையும் திமுக கட்சியும் தீவிரமாக ஆதரவு அளித்து வருகிறது. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த டி ஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் பலர் இந்த டி ஷர்டை வாங்க தொடங்கி உள்ளனர்.

ஆனால் என்ன
இந்த நிலையில் இந்திக்கு ஆதாரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் டி ஷர்ட் அணிந்து இணையத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவர் தனது டிவிட்டில், நாங்கள் இந்த டி ஷர்டை யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை.

எதிர்ப்பு இல்லை
யாருக்கும் எதிராக நாங்கள் செயல்படவில்லை. எந்த கட்சிக்கும் எதிராகபேசவில்லை . தமிழக இளைஞர்களை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். அதை உணர்த்தவே இந்த டி ஷர்டை வெளியிட்டோம், நன்றி, அனைத்து மொழி கற்போம்!! தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா, என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

என்ன சொன்னார்
அதேபோல் நேற்று தேமுதிகவின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை கோயம்பேட்டில் நடந்த விழாவில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் சிலர் மொழியை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். மொழி அரசியல் செய்யும் திமுகவின் குடும்பத்தினர் இந்தி படித்துள்ளனர். ஆனால் தங்களுக்கு இந்தி தெரிந்தாலும் மக்களுக்கு இந்தி தெரிய கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள், என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications