அனைத்து கட்சிகளும் பேசுறாங்க.. ஆனால்.. தேமுதிக கூட்டணி குறித்து மீண்டும் குழப்பியடிக்கும் பிரேமலதா
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக, அதிமுகவில் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் தான் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளனர்.

தேமுதிக கூட்டணி
தேமுதிக தரப்பில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அவர்களின் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பதாக கூறினார்கள். ஆனால் அதில் கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக 2 கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அமமுக இணைந்தபோதே தேமுதிகவும் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக கூறப்பட்டது. இருப்பினும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தங்களுடன் பேசவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
திமுக, அதிமுக 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக சுமார் 20 தொகுதிகள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது. கேப்டனின் ரத யாத்திரை என்கிற பெயரில் பிரேமலதா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என்று பிரேமலதா கூறியிருந்தார்.
பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் முடிவு
ஆனாலும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக சார்பில் தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் நிகழ்வு, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, "பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவோம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்வோம். பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும். எங்களுக்கு எல்லாரும் தோழமை கட்சிகள் தான். எல்லோருடனும் நட்பாக பேசுகிறோம். அதை இல்லை என்று சொல்ல முடியாது.
எங்கள் நலனும்
கூட்டணிக்கு ஒரே பார்முலா தான். எங்களுக்கு மட்டும் தனியாக இல்லை. தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக, தவெக, நாம் தமிழர் எல்லோருடனும் நட்பாக இருக்கிறோம். எங்கள் நலனையும் யோசித்து கூட்டணி பற்றிய அறிவிப்பு இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications