டீம் கனிமொழி டூர்.. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு இன்று முதல் பயணம்! தூத்துக்குடியில் ஸ்டார்ட்
சென்னை: எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்குகிறது.
2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கும் சூழலில் திமுகவின் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கும் நிலையில், இன்று முதல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ்நாடு முழுவதும் பயணத்தை தொடங்குகிறது. தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்.ஏக்கள்., கோ.வி.செழியன், சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன், எம்பிக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.எம்.அப்துல்லா, சென்னை மேயர் பிரியா இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு இன்று தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கி சென்னையில் பிப்ரவரி 23 ஆம் தேதி நிறைவு செய்கிறது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொது நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமான கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதில், "2024 -ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் தலைவராக தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குழுவின் உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, கோ.வி.செழியன்.எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழிலரசன்.எம்.எல்.ஏ., கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்.எம்.பி., எம்.எம்.அப்துல்லா.எம்.பி., திருமதி.பிரியா டாக்டர்.எழிலன் நாகநாதன்.எம்.எல்.ஏ., சென்னை மேயர் ஆகியோர் உள்ளனர்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று (05.02.2024 - திங்கள் கிழமை) காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் கோரிக்கை மனுக்களை பெற இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். வருகை தரும் அனைவரும் தங்கள் கருத்துக்களை மனுவாக எழுதிக் கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications