தண்ணீர் பந்தல் திறக்க வந்த திமுக பிரமுகர் வெட்டிக் கொலை.. சென்னை பிராட்வே பகுதியில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை அருகே திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாசர்பாடியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவர் 59 ஆவது வட்ட திமுக செயலாளராக இருந்து வந்தார். பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் பந்தலுக்காக தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது சம்பவ இடத்திற்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வந்தனர். தங்களிடம் வைத்திருந்த அரிவாளை எடுத்தனர்.

தப்ப முயற்சி
அப்போது சவுந்திரராஜன் தப்ப முயன்ற போது சுற்றி வளைத்த மர்மகும்பல் சவுந்திரராஜனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இவர் அதிமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திமுகவில் இணைந்தார். எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என தெரியவில்லை.

ஆள்நடமாட்டம்
ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த சில தினங்களாக சென்னையில் கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

திமுக செல்வம்
அதிலும் திமுக பிரமுகர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த திமுகவின் 188 ஆவது வட்ட செயலாளராக இருந்த செல்வம் தனது கட்சி அலுவலகம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுற்த்து போலீஸார் விசாரணை நடத்திய கூலிப்படை தலைவனை கைது செய்தனர்.

32 வயதான நபரும் கொலை
அது போல் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே சென்னை பல்லவன் சாலை சாந்தி நகரில் புகைப்படம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 32 வயதான திமுக நிர்வாகி மதன் மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் சென்னையில் திமுகவின் பேச்சாளராக இருந்த சம்பத்குமாரை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. இது போல் தலைநகர் சென்னையில் நடைபெறும் இந்த தொடர் கொலைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications