பியூட்டி பார்லர், பிரியாணி கடை .. இன்று ராதாரவி.. திமுகவினருக்கு தேவை கடுமையான கடிவாளம்
அளவுக்கு அதிகமான அராஜகங்களை ஒழித்துகட்ட திமுக தீவிர நடவடிக்கை எடுக்குமா?
Recommended Video
சென்னை: "செயலற்ற ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகளின் கூடாரமாகிறது தமிழ்நாடு" என அன்று கருணாநிதி சொன்னார். உண்மையிலேயே கருணாநிதி இல்லாத நிலையில், இன்று திமுகதான் அத்துமீறி சென்று கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் மதுரை திமுக-வில் அழகிரியை சுற்றி அதிரடி பேர்வழிகள் அதிகம் இருந்தார்கள் என்றும், அவர்கள்தான் திமுக-வையும் அழகிரியின் பெயரையும் கெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு அழகிரி எங்கோ இருக்கிறார். ஆனால் அத்துமீறல்களோ திமுகவில் தொடர்ந்து நடந்து வருகிறது.
குறிப்பாக கருணாநிதி இறந்த பிறகு, கட்சி ஒரு கட்டுக்கோப்புடன் இல்லை என்றே தெரிகிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிறான். பியூட்டி பார்லர் அடாவடி, பிரியாணி கடை அக்கப்போர் முதல் இன்று ராதாரவி வரை அனைத்துமே கொஞ்சம் ஓவர் டோஸ்தான்!
நயன்தாராவை ராதாரவி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது- கமல் வேதனை
ரவுடிகள் கூடாரம்
இதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் தலைமையே திமுகதான் என்று தொண்டர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்களா? அல்லது ரவுடிகள் நிறைந்த கூடாரமாக திமுக உருமாறி கொண்டிருக்கிறதா? என தெரியவில்லை. இருக்கிற வேலை வெட்டிகளை விட்டுவிட்டு, உடல் நிலையைகூட கருத்தில் கொள்ளாமல் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார் என்றால், தொண்டர்கள், நிர்வாகிகள் இந்த வலியை, உணர்வை புரிந்து கொள்ள வேண்டாமா?
விரசமான பேச்சு
ராதாரவிக்கு என்ன அப்படி ஒரு வாய் நீளம்? இவரை விட பெரிய நட்சத்திரங்களை தமிழகம் கண்டிருக்கிறது. இவரை விட பெரிய மேடை பேச்சாளர்களான பட்டுக்கோட்டை அழகிரி முதல் பசும்பொன்தேவர் வரை கண்ட தமிழகம் இது! சினிமா, அரசியல் இவற்றில் அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று ராதாரவிக்கு ஏளனப்பேச்சு! இப்போது மட்டுமில்லை.. எப்போதுமே ராதாரவியின் பேச்சில் விரசம், கெட்டவார்த்தை என கடிவாளம் இல்லாமல்தான் இருக்கும்.
ராஜாளி
போலி பெருமிதங்களுக்கு நடுவே தனித்தீவு போல கடைசிவரை வாழ்ந்து மறைந்த நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகனா இவர்? என்றும், திராவிடர் கழகத்தை வார்த்தெடுக்க பல எதிர்ப்புகளையே உண்டு வாழ்ந்த ராஜாளி எம்ஆர் ராதாவின் மகனா இவர்? என்றும்தான் ராதாரவியை பார்த்து கேட்க தோன்றுகிறது.
சஸ்பெண்ட்
திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அன்று பியூட்டி பார்லர் மீது தாக்குதல் நடத்தியவரை கட்சி அன்று சஸ்பெண்ட் செய்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே திரும்பவும் சேர்த்து கொண்டது. அப்படியானால் ஒரு கட்சியின் உச்சபட்ச தண்டனை என்பது வெறும் சஸ்பெண்ட் மட்டும்தானா?
களங்கம்
இன்றைக்கும் ராதாரவி சஸ்பெண்ட் என்றால் நாளைக்கு, அவர் திரும்பவும் கட்சிக்குள் சேர்த்து கொள்ளப்படுவாரா? இரக்கம், ஈவு, மனிதாபிமானம் இல்லாமல் எந்த அராஜகமும் செய்யலாம்.. பிறகு பெயரளவில் ஒரு சஸ்பெண்ட்.. மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவதுதான் மரபு என்றால், நாளை யார் வேண்டுமானாலும் தவறு செய்ய துணியத்தானே செய்வார்கள்? இதனால் களங்கம் கட்சிக்குத்தானே? இது எங்கு கொண்டுவிட போகிறதோ தெரியவில்லை..
உரிய மரியாதை
ஆனால் கட்சி தலைவர் அடாவடி பேர்வழிகளின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், கடுமைப்படுத்த வேண்டும்... அதுதான் திமுகவை பல தியாகங்களை செய்து வார்தெடுத்த கருணாநிதிக்கு செய்யும் உரிய மரியாதை.. கட்சி தலைமைக்கும் இந்த பொறுப்பு உண்டு!