சுப்ரீம் கோர்ட் முன்பாக பெரிய கேள்வி.. செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி உத்தரவு குறித்து வழக்கறிஞர்!
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கை, ஐகோர்ட் நீதிபதி நிஷா பானு முடித்து வைத்து உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக பேசியுள்ளார் திமுக வழக்கறிஞர் சரவணன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

ஐகோர்ட் தீர்ப்பு: ஏற்கனவே இந்த வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் 3வது நீதிபதி முன்பாக விசாரணை நடைபெற்றது. 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன், அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது செல்லும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போது முதல் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, அமலாக்கத்துறை காவலை முடிவெடுப்பது குறித்து இன்று 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
நீதிபதி அதிரடி உத்தரவு: அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் என்.ஆர் இளங்கோ ஆஜரானார். என்.ஆர்.இளங்கோ, தற்போது எந்த வாதங்களையும் எடுத்து வைக்க வரவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதி நிஷா பானு, "நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுவிட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இந்த வழக்கை முடித்து வைத்து விடுகிறோம் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.
திமுக வழக்கறிஞர் சரவணன்: இந்த உத்தரவு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை, "இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ஐகோர்ட் விசாரித்து முடித்த பிறகு நாங்கள் முடிவெடுப்போம் என சுப்ரீம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவும் இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
பல்வேறு சட்டப் பிரச்சனைகளுக்கு உச்ச நீதிமன்றம் தான் தெளிவான தீர்ப்பைச் சொல்ல முடியும். நீதியரசர் நிஷா பானு புதிய கருத்தை தெரிவித்துள்ளார். இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பப்படுவாரா என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே தெரிய வரும்.
ஏற்கனவே வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் ஐகோர்ட்டில் எந்த வாதங்களையும் வைப்பது சரியாக இருக்காது. எனவே, எங்கள் தரப்பில் இன்று அமலாக்கத்துறை காவலுக்கு எதிரான வாதங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இனி எல்லாமே உச்ச நீதிமன்றம் தான்.
மிகப்பெரிய கேள்வி: செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இந்த கைது செல்லாது என்பது எங்கள் வாதம். சுப்ரீம் கோர்ட் இதில் முடிவு எடுக்கும். முதல் 15 நாட்கள் முடிந்த பிறகு போலீஸ் காவலில் எடுக்க முடியாது என்ற சட்டப் பிரச்சனை இருக்கிறது.
அதைவிட முக்கியமாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் கிடையாது என எல்லா நீதிபதிகளும் ஒப்புக்கொண்ட பிறகு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி முன் நிற்கிறது. இந்தக் கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications