உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த துரைமுருகன் உடல் மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து அறிவாலயம் வாசலில் இருந்து கை தாங்கலாக பூச்சி முருகன் அவரை அழைத்து சென்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் ஜனவரி மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்பின் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூட துரைமுருகன் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ் அமர வைக்கப்பட்டார். அதேபோல் திமுக பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவிலும் துரைமுருகன் பெயர் இடம்பெறவில்லை. காங்கிரஸ், மதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போதும், துரைமுருகன் அங்கு இருக்கவில்லை.
இதனால் உடல்நலக் குறைவு காரணமாக துரைமுருகன் வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாக தெரிய வந்தது. தற்போது சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து அத்தனை நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயம் வந்துவிட்டனர்.
அந்த வகையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் அண்ணா அறிவாலயம் வந்தார். சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்த அவர், அண்ணா அறிவாலயம் வந்த போது அவர் மீது கவனம் திரும்பியது. உடல் மெலிந்து, எடை குறைந்து காணப்பட்ட துரைமுருகன், காரில் இருந்து இறங்கவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை பார்த்து அதே நகைச்சுவையுடன், "வந்துட்டான்யா.. வந்துட்டான்" என்று சொல்லிவிட்டு திரும்பினார். இருப்பினும் அறிவாலயம் வாசலில் இருந்து துரைமுருகனை கை தாங்கலாக பூச்சி முருகன் அழைத்து சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது.
மேலும் இந்த சட்டசபைத் தேர்தலில் துரைமுருகன் போட்டியிட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக துரைமுருகனால் தேர்தல் பணிகளை செய்வதே சிக்கல் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் காட்பாடி தொகுதியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications