விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!
சென்னை: கடும் இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் 5 தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தனது விருப்ப தொகுதிகளின் பட்டிலை திமுகவிடம் வழங்கி உள்ளது. அதில் விசிக, காங்கிரஸ், திமுகவின் தொகுதிகளை குறிவைத்து கேட்டுள்ளதால் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னொரு சவால் வந்துள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்து வருகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக 6 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியது. இதில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 4 இடங்களில் தோற்றுப்போனது.

இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் வந்துள்ளன. இதனால் இந்த முறை தொகுதியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் திமுக தொகுதி பங்கீடு குழு கேட்டது.
இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதியை குறைக்க மறுத்து வந்தது. இதனால் 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. இதையடுத்து 4வது கட்ட பேச்சுவார்த்தையில் கடந்த சட்டசபை தேர்தலைவிட ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ''எங்களின் முதன்மை நோக்கம் பாஜகவை தோற்கடிப்பது தான். இதற்காக ஒரு தொகுதியை விட்டு கொடுப்பதில் நாங்கள் கவலை கொள்ளவில்லை'' என்றார்.
பட்டியலில் 10 தொகுதிகள்
இதன் அடுத்தக்கட்டமாக திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது விருப்ப தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளது. அதன்படி 10 தொகுதிகளின் பெயர்கள் உள்ளன.. இதில் இருந்து 5 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளது. அதன்படி தளி, திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், சிவகங்கை, திருப்பூர்வ வடக்கு, வால்பாறை, நாகப்பட்டினம் ஸ்ரீவில்லிபுத்தூர், தொண்டமுத்தூர், பழனி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டியலாக வழங்கி உள்ளது..
தொகுதிகளின் பின்னணி
இதில் தளி, திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதேபோல் பவானிசாகர், சிவகங்கை, திருப்பூர் வடக்கு மற்றும் வால்பாறை உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் கடந்தமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். தற்போது அந்த தொகுதியை மீண்டும் கேட்டுள்ளனர்.
விசிக எம்எல்ஏ தொகுதியில் கண்
இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ள நாகப்பட்டினம் தொகுதி கடந்த முறை திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆளுநர் ஷா நவாஸ் எம்எல்ஏவாக உள்ளார். இவர் மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்க தயாராகி வரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த தொகுதியை கேட்டுள்ளது.
காங்கிரஸ் - திமுக தொகுதிகள்
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் மண்ராஜியிடம் தோற்றார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் பழனி சட்டசபை தொகுதிகளில் கடந்த முறை திமுக களமிறங்கியது. தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி அதிமுகவின் எஸ்பி வேலுமணியின் கோட்டையாக உள்ளது. கடந்த முறை திமுகவின் கார்த்திகேயா அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதேபோல் பழனியில் சிட்டிங் எம்எல்ஏவாக ஐபி செந்தில் குமார் உள்ளார். இவர் அமைச்சர் ஐபி பெரியசாமியின் மகன் ஆவார். இதனால் பழனி தொகுதி நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்பி வேலுமணி செல்வாக்கால் அவரை வீழ்த்த முடியாது என்று திமுக நினைத்தால் அந்த தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட்க்கு தள்ளிவிடலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications