முத்தரையர் சமூக ஆதரவை பெறும் திமுக.. தமிழக தேசம் கட்சிக்கு திருமயம் தொகுதி ஒதுக்கீடு?
சென்னை: திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியின் செல்வக்குமாருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அவருக்கு திருமயம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அப்படியில்லை என்றால், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறொரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பு தந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் எவ்வளவு வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் பிரிக்கப் போகிறார் என்பதை யாராலும் தெளிவாக கணிக்க முடியவில்லை. இதனால் சிறிய கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் திமுக சீனியர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் அண்மையில் முத்தரையர் சமூகத்தின் செல்வக்குமார் நடத்தி வரும் மக்கள் தேசம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் திமுக இந்த நகர்வை மேற்கொண்டது. கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் தேசம் கட்சி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் தேர்தலுக்கு பின் மக்கள் தேசம் கட்சியை பாஜக கண்டுகொள்ளவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த செல்வக்குமார் திமுக பக்கம் நகர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தினர் பெரியளவில் இருக்கின்றனர். குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் முத்தரையர் சமூக வாக்குகள் இருக்கின்றன.
ஜெயலலிதா இருந்தவரை முத்தரையர் சமூக வாக்குகள் அதிமுக பக்கம் சென்று கொண்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்தபின், முத்தரையர் வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. கடந்த தேர்தலின் போது முத்தரையர் சமூக வாக்குகளை கைப்பற்றும் வகையில் தமிழர் தேசம் கட்சியின் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
ஆனால் சட்டசபைத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வக்குமாருக்கு அதிமுக எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த செல்வக்குமார், சுயேட்சை வேட்பாளராக திருமயம் தொகுதியில் போட்டியிட்டார். இதில் செல்வக்குமார் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றார்.
அதேபோல் திமுக சார்பாக ரகுபதி 71,349 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் வைரமுத்து 69,967 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். இதனால் அதிமுகவின் தோல்விக்கு செல்வக்குமார் முக்கிய காரணமாக அமைந்தார். இந்த முறை செல்வக்குமாருக்கு திமுக தரப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமயம் தொகுதியில் தமிழர் தேசம் கட்சி செல்வக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலமாக டெல்டா மாவட்டங்களில் முத்தரையர் சமூக வாக்குகளை திமுக மொத்தமாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications