“க்ளீன் ஸ்வீப்” அடிக்கும் திமுக? 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி நிலை.. ABP C-Voter Exit Poll கணிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி க்ளீன் ஸ்வீப் அடிக்கக்கூடும் என ஏபிபி - சி வோட்டர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது ஏபிபி - சி வோட்டர்.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளது ஏபிபி.
ஏபிபி - சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 0 - 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என ஏபிபி - சி வோட்டர் கணித்துள்ளது.
மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 46.3% வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 % வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 % வாக்குகள் பெறும், மற்ற கட்சிகளுக்கு 13.8 % வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தேனி லோக்சபா தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அப்போது பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி க்ளீன் ஸ்வீப் அடிக்கக்கூடும், இல்லாவிட்டால் அதிகபட்சம் பாஜகவும், அதிமுகவும் தலா ஒரு இடங்களை பெறக்கூடும் என ஏபிபி - சி வோட்டர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications