அண்ணா அறிவாலயத்தில் உற்சாகம்.. வெற்றி பெற்ற எம்பிக்கள் முதல்வர் முக ஸ்டாலினிடம் வாழ்த்து
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல் முறையாக அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவரும், முதல்வவருவான மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அவருக்கு மேள-தாளம் முழங்கவும், பட்டாசுக்கள் வெடித்தும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் பயணித்த கார் மீது திமுக மகளிரணியினர் பூக்களை தூவி வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார் , அருண் நேரு உள்ளிட்ட 22 எம்பிக்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என 38 பேரும் வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர் .
அதேபோல திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் வெற்றிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உள்பட திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் வெற்றியால் அண்ணா அறிவாலயத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications