அதிமுக, பாஜகவுக்கு “முட்டை”.. மொத்தமா அள்ளும் திமுக கூட்டணி.. தமிழ்நாடு லோக் போல் சர்வே ரிசல்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கான லோக் போல் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திமுக கூட்டணி க்ளீன் ஸ்வீப் அடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி என களத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
லோக் போல் சர்வே: இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி, எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற கருத்துக்கணிப்பை லோக் போல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது லோக் போல் கருத்துக்கணிப்பு.

க்ளீன் ஸ்வீப் அடிக்கும் திமுக: தமிழ்நாட்டில் உள்ள சில தொகுதிகளில் இழுபறி நிலவும் என பல்வேறு கள நிலவரங்கள் தெரிவிக்கும் நிலையில், திமுக கூட்டணி, தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளையும் அள்ளும் எனக் கூறுகிறது லோக் போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு.
இந்தக் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெல்ல வாய்ப்பிருப்பதற்கான காரணங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களின் வாக்குகள், அதிமுக, பாஜக என இரு கூட்டணிகளுக்கு சிதறுவதால், திமுக கூட்டணி ஃபுல் ஸ்வீப் அடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிலை: அதிமுகவை பொறுத்தவரை, தங்கள் வாக்கு வங்கியை இந்த முறையும் தக்க வைத்துக் கொள்ளும், ஆனால் வாக்குகள் சிதறுவதன் காரணமாக வெற்றி கிடைக்காமல் போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிலை: பாஜக, பாமக கூட்டணியை பொறுத்தவரை இந்த கூட்டணிக்கு பல்வேறு தொகுதிகளில் வாக்குகள் கன்வெர்ட் ஆகாது என்பதையே கள நிலவரம் எடுத்துக் காட்டுவதாக லோக் போல் கணிப்பு தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்த அலை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் வாக்குகளின் பெரும் பகுதி திமுக கூட்டணிக்கே செல்வதாகவும், பட்டியலின மக்களின் வாக்குகள், திமுக - அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கும் பிரிந்து செல்வதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிரான எண்ண ஓட்டம், இன்னும் களத்தில் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சில சிட்டிங் எம்.பிக்கள் மீது அதிருப்தி நிலவினாலும், ஒட்டுமொத்த அலையின் அடிப்படையில் அவர்களும் கரை சேர்வார்கள் எனத் தெரிவித்துள்ளது லோக் போல் கணிப்பு.












Click it and Unblock the Notifications