லிஸ்ட்லயே இல்லையே..இதென்னப்பா புது ட்விஸ்ட்-கோர்ட்டில் ஜெயித்த இபிஎஸ்க்கு திருமாவளவன் திடீர் வாழ்த்து!
எடப்பாடி பழனிசாமிக்கு தொல். திருமாவளவன் எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, எடப்பாடி பழனிசாமிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக் குழு மிக முக்கியமானது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில், கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் அக்கட்சி செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்குமான உறவும் முறிந்த கதையாகிவிட்டது. இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்பியுமான தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே. இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதேபோல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:
ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக நிலவி வந்த ஐயப்பாடுகள் நீங்கி, தெளிவு பிறந்துள்ளது. வாய்மையே வெல்லும்" என்பதற்கு இணங்க இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீங்கி, @EPSTamilNadu
அவர்கள் @AIADMKOfficial பொதுச்செயலாளராக முழு சுதந்திரத்துடன் செயல்பட சிறப்புமிகு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத இவ்வரசிடமிருந்து மக்களைக் காப்பாற்றத் தோழமைகளை வலுப்படுத்தி தமிழகத்திற்கு நிரந்தர விடிவு காலத்தை உருவாக்க வாழ்த்துகிறேன்.












Click it and Unblock the Notifications