கிடைத்ததை நழுவ விடக் கூடாது! கட்சி பேதமின்றி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் Ex MLA-க்கள்!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக என கட்சி பேதமின்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
நாளுக்கு நாள் அரசியலில் உருவாகி வரும் கடும் போட்டிகளுக்கு மத்தியில், கிடைக்கும் வாய்ப்பையும் ஏன் விடுவானென்று அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேயராகவோ, துணை மேயராகவோ, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவோ வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர்.

கே.என்.சேகரன்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.என்.சேகரன். இப்போது இவர் திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக தனது திருவெறும்பூர் தொகுதியை இரண்டு முறை விட்டுக்கொடுத்தவர் என்பதால், இவர் கவுன்சிலராக வெற்றிபெறும் பட்சத்தில் திருச்சி மேயராகவோ அல்லது துணை மேயராகவோ வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

அலெக்ஸாண்டர்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த அலெக்சாண்டர். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில் இப்போது மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கியிருக்கிறார். சென்னை மாநகராட்சி 89-வது வார்டில் போட்டியிடும் அவர், அதிமுக வெற்றி பெற்றால் துணை மேயர் ரேஸிலும், தோல்வி அடைந்தால் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரேஸிலும் முதலிடத்தில் இருக்கிறார்.

எஸ்.ஏ. சத்யா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக உதயமான ஒசூர் மாநகராட்சியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஒசூர் மாநகராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் பட்சத்தில் மேயர் பதவியை பிடிப்பதற்கு சத்யா காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குணசேகரன்
திருப்பூர் மாநகராட்சியின் 35-வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெறும் பட்சத்தில் திருப்பூர் மேயர் பதவியை குறித்து உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர்கள்
இதேபோல் முன்னாள் அமைச்சர்களான பாலகிருஷ்ணா ரெட்டி, எஸ்.பி.சண்முகநாதன், செல்வி ராமஜெயம், உள்ளிட்டோர் குடும்பங்களில் இருந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இன்றைய பரபரப்பான அரசியலில் கிடைத்ததை நழுவவிடாமல் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாலேயே மேற்கண்ட இந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications