Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை எழும்ப முடியாமல் அடிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும், பாஜக வளர விடாமல் தடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இரு தேசிய கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளும், அதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பெரும் களேபரத்தை உண்டாக்கியது காங்கிரஸ். ஒரு தருணத்தில் கூட்டணி உடைந்துவிடும் என கூறப்பட்டது. இறுதியாக திமுக - காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியை தக்க வைத்து கொண்டனர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என்று காங்கிரஸ் கட்சி டிமாண்ட்டை ஏற்றியது தான் இதற்கு காரணம். இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட கூடுதலாக 3 இடங்கள் வழங்கி 28 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.

dmk-and-aiadmk-gives-very-tough-seats-for-bjp-and-congress-respectively-in-tamil-nadu-assembly-elect

மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2021 சட்டசபை தேர்தலை காட்டிலும் 7 தொகுதிகள் கூடுதலாகும். இதனால் 20 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகளில் இந்த முறை பாஜக போட்டியிடுகிறது. சரி இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஸ்டாலின் - எடப்பாடி போட்ட கடிவாளம்

ஆனால் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சொல்லி வைத்தது போல் காங்கிரஸ், பாஜகவுக்கு கடிவாளம் போட்டுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெல்ல முடியாத தொகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.

குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு தள்ளிவிட்டுள்ளார். மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமியும், திமுகவின் கோட்டையாக உள்ள தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி விட்டுள்ளார். இதனை நன்கு ஊற்று கவனித்தால் உங்களுக்கு புரியும். காங்கிரஸ் - பாஜகவுக்கு என்னென் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன? அந்த தொகுதிகளின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

காங்கிரஸ்க்கு 28 தொகுதிகள்

காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம் (ஊட்டி), ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பெண்ணாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர் உள்ளிட்ட 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பொன்னேரி (தனி), வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர் உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, மயிலாடுதுறை, விருத்தாசலம், அறந்தாங்கி, காரைக்குடி, திருவாடானை, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு உள்ளிட்ட 16 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

ஒருமுறை கூட வெல்லாத தொகுதிகள்

இருப்பினும் தற்போது காங்கிரஸ் - திமுக இடையே நடந்த பிரச்சனையால் இந்த தொகுதிகளில் திமுகவினர் இறங்கி வேலை செய்வார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல் புதிதாக வழங்கப்பட்ட கடலூர், ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பெண்ணாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கலாம்.

ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள கடலூர், ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், உசிலம்பட்டி இந்த தொகுதியில் ஒருமுறை கூட காங்கிரஸ் வெற்றி பெற்றது இல்லை.

மேலூர் - ஆத்தூர்

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரை எடுத்து கொண்டால் 1952, 1957, 1962, 1980, 1984, 1989, 1991, ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது. அதன்பிறகு திமுக, அதிமுக தான் தொடர்ந்து வெற்றி பெற்றது. 2001 முதல் 2021 வரை தொடர்ந்து 5 தேர்தல்களில் அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. 2016, 2021ல் அதிமுகவில் வென்ற பெரியபுள்ளான் மீண்டும் களமிறங்கி உள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி சுலபமாக இருக்காது.

மேலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு கடைசியாக 2006ல் வெற்றி பெற்றது. அதன்பிறகு வெற்றி பெறவில்லை. கடந்த 3 சட்டசபை தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று கோட்டையாக்கி வைத்துள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் என்பதால் இங்கு காங்கிரஸ் வெல்வது கடினமாக இருக்கும்.

அம்பை - சங்கரன்கோவில்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 1971, 1989ல் காங்கிரஸ் வென்றது. அதன்பிறகு வெற்றி பெறவில்லை. கடந்த 3 தேர்தலில் அதிமுக வென்ற நிலையில் சிட்டிங் எம்எல்ஏவான இசக்கி சுப்பையா மீண்டும் போட்டியிடுகிறார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை எடுத்து கொண்டால் 1952, 1957, 1962ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு திமுக, அதிமுக தான் வென்றது. சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் ராஜா வாசுதேவல்லூர் தொகுதிக்கு மாறிய நிலையில் சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - பெண்ணாகரம்

கடந்த 3 தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வென்று வருகிறது. கிருஷ்ணகிரியை எடுத்து கொண்டால் 1957 1967 ல் தான் காங்கிரஸ் வென்றது. பிறகு திமுக, அதிமுக மாறி மாறி வென்றது. தற்போது அதிமுகவை சேர்ந்த அசோக் குமார் எம்எல்ஏவாக உள்ளார்.

பெண்ணாகரத்தில் 1957, 1967 ல் காங்கிரஸ் வென்றது. அதன்பிறகு வெற்றி பெறவே இல்லை. அம்பாசமுத்திரத்தில் 1971, 1981ல் காங்கிரஸ் வென்றது. அதன்பிறகு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தற்போது பாமகவின் ஜிகே மணி எம்எல்ஏவாக உள்ளார்.

வன்னியர்கள் நிறைந்த இந்த தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் இணைந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் எதிர்முனையில் அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவதால் கடும் போட்டி இருக்கும்.

பாஜக தொகுதிகள்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என்று பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

7 தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கியிருந்தாலும் கூட வெல்வது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் 2021 சட்டசபை தேர்தலில் பாஜக திருநெல்வேலி, மொடக்குறிச்சி, கோவை தெற்கு, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் வென்றது. இதில் திருநெல்வேலி, கோவை தெற்கு தொகுதிகளை அதிமுக எடுத்து கொண்டுள்ள நிலையில் மொடக்குறிச்சி, நாகர்கோவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவையில் பாஜக பலமாக உள்ளது. ஆனால் சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் கோவையில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சாத்தூர் - கோவை வடக்கு - அவிநாசி

திருநெல்வேலிக்கு பதில் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிடுகிறார். அங்கு அவர் சார்ந்த தேவர் சமுதாயத்தினர் இருப்பதால் வெல்ல வாய்ப்புள்ளது. கோவை வடக்கில் வானதி சீனிவாசன் வெற்றி பெறலாம். மொடக்குறிச்சியில் கடந்த முறை பாஜக வேட்பாளர் சரஸ்வதி 281 வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளரை வீழ்த்தினார்.

இந்த முறை அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்க வாய்ப்புள்ளது. இங்கு அதிமுக சிட்டிங் எம்எல்ஏவான முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் வாக்களிப்பார்களா? என்ற கேள்வி உள்ளது.

நாகர்கோவில் - மயிலாப்பூர்

அதேபோல் கடந்த முறை வென்ற நாகர்கோவில் தொகுதியை பாஜக தக்கவைத்துள்ளது. 2021ல் பாஜகவின் எம்ஆர் காந்தி இந்த தொகுதியில் வென்றார். மீண்டும் அவர் இந்த தொகுதியில் போட்டியிடலாம். இல்லாவிட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இல்லாவிட்டால் பொன் ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராக இருக்கும் மீனாதேவ் என்பவர் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம். அதேபோல் சென்னை மயிலாப்பூரில் அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழிசை களமிறங்கலாம். இங்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு சாதகமாக உள்ளன.

திமுகவின் கோட்டையில் பாஜக

மீதமுள்ள 18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம் என்று கூறப்படுகிறது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், திருச்செந்தூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆவடி உள்ளிட்ட தொகுதிகளை எடுத்து கொண்டால் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணன், திருவண்ணாமலையில் அமைச்சர் எவ வேலு, ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இதனால் இந்த தொகுதிகளில் பாஜகவால் வெல்வது கடினம் என்று கூறப்படுகிறது.

குமரி தொகுதிகள்

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, நாகர்கோவில் தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்ததால் எடப்பாடி பழனிச்சாமி 4 தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிவிட்டுள்ளார்.

இதில் நாகர்கோவிலில் மட்டுமே பாஜகவுக்கு சாதகமாக சூழல் உள்ளது. விளவங்கோட்டில் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி களமறிங்குவது பாசிட்டிவாக இருந்தாலும் கூட அங்கு ஒருமுறை கூட பாஜக வெற்றி பெற்ற இல்லை. அதேபோல் குளச்சல், பத்மநாபபுரத்திலும் அதிகமாக கிறிஸ்தவர்கள் இருப்பது பாஜகவுக்கு சவாலாக இருக்கும்.

ஒருமுறை கூட வெல்லாத தொகுதிகள்

அதேபோல் தளி தொகுதியில் பாஜக 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு 2006, 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் வென்றதே கிடையாது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி என மூன்று தொகுதிகளிலும் பாஜக வென்றதே இல்லை. மானாமதுரை மதுரை தெற்கு, ராமநாதபுரம், ராதாபுரம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக ஒருமுறை கூட வென்றது கிடையாது.

மே 4 வரை காத்திருங்கள்

இதன்மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செக் வைத்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தை 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸ், பாஜக வரவிடாமல் இருவரும் தடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

களநிலவரம் இப்படி இருந்தாலும் கூட காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் எத்தனை பேர் வென்று வருகிறார்கள்? என்பதை அறிய நாம் மே 4 வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் அன்று தான் சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+