Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பற்ற வைத்த கூட்டம்.. ‘தீப்பொறி’ பறக்கும் தமிழக அரசியல் களம்.. ஸ்டாலின் vs எடப்பாடி ஆட்டம் ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அதிமுகவை ஊழல் கட்சி எனக் குறிப்பிட்டு அட்டாக் செய்தார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிலையில், திமுகவின் ஊழல்கள் எனக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆக, தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான மறைமுக பிரச்சாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதலில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்துகொண்ட நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டன. இதில் தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மஜக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 DMK and AIADMK ready for big fight in lok sabha election 2024

கூட்டணி ஆயத்தம்: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I-N-D-I-A (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்ட்ததில் பங்கேற்றுவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை கடுமையாகச் சாடினார். டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தார் ஸ்டாலின்.

அதிமுகவை தாக்கிய ஸ்டாலின்: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகளை கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரதமர் மோடியின் நியாயம். பிரதமர் யாரையெல்லாம் ஊழல்வாதிகள் என்று கூறினாரோ அவர்கள் எல்லாம் இன்று அவருக்கு அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமரின் அரவணைப்பில் இருந்தனர்.

இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள். பார்த்தீர்களா, அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை பிரதமர் அரவணைத்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி: இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்குப் பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசுதான். மற்றவையெல்லாம் பல்வேறு வகையில் கால சூழ்நிலைகளால் கலைக்கப்பட்டவை. எனவே திமுகவிற்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது அதில் திமுக அங்கம் வகித்தது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எம்.பி கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எங்களைப் பற்றி பேச தகுதி இல்லை.

அருகதை இல்லை: நேற்று ஸ்டாலின் பங்கு பெற்ற பல்வேறு கட்சிகளின் கூட்டத்திற்கு யாரெல்லாம் வந்திருந்தனர் என பார்த்தீர்களா.. ஸ்டாலினிற்கு வரவேற்பு கொடுத்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற பல தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. இப்படி இருக்கும் போது அவர்களுக்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை." என காட்டமாக பதிலடி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

தேர்தல் களம் சூடுபிடிக்குது: எதிர்க்கட்சிகள் 2வது ஆலோசனைக் கூட்டம் நடத்திய அதே நாளில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டமும் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு அருகில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.

அவ்வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெரும் கட்சிகளுக்கு இந்த 2024 லோக்சபா தேர்தலில் முக்கிய இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கான சங்கநாதம் நேற்று இரண்டு கூட்டணிகள் சார்பிலும் முழங்கப்பட்டு விட்ட நிலையில், திமுக - அதிமுக இரு கட்சிகளிலும் மறைமுக பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டதற்கான அறிகுறியாகவே ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் அமைந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+