4 தொகுதி இடைத் தேர்தலிலும், அதிமுகவை கைவிட்டதா பாஜக? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
சென்னை: திமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியும், திரைமறைவில் கூட்டணி வைத்து உள்ளன என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், இன்று மாலை, பேசிய அவர், கூறியதாவது: பாஜக தலைவர்கள் லோக்சபா தேர்தல் நடைபெற்றதுமே, தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புறக்கணித்து விட்டதாகவும், வேறு மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட சென்றுவிட்டதாகவும் திமுக சார்பில் ஒரு வதந்தி பரப்பப்பட்டுவருகிறது.
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. மே 19ஆம் தேதி தான் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக தலைவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்வதற்கு நான் உட்பட பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தயாராகத்தான் இருக்கிறோம். அதிமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.
திமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள். பாஜக மற்றும் அதிமுக நடுவே இருப்பது வெளிப்படையான கூட்டணி. ஆனால், திமுக மற்றும் அதிமுக நடுவே இருப்பது திரைக்குப் பின்னால் இருக்கக்கூடிய கூட்டணி. அந்த இரண்டு கட்சிகளின் நோக்கம் ஒன்று தான். அவர்கள் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுகவுக்கு குட்பை... சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு 'ஜம்ப்'... திருமா சூசகம்
அதிமுக ஆட்சியை கலைக்க திமுக ஆதரவு தேவை என்று, அமமுக கட்சியின் தங்கத் தமிழ்ச் செல்வன் இன்று பேட்டிளித்திருந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.