"அவரே" நேரில் வர போறாராமே.. ஸ்டாலினிடம் பேச போறாராம்.. டெல்லி வரை போன விஷயம்.. தெறிக்க விடும் திமுக
காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் சென்னிதலா சென்னை வருகிறார்
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி பஞ்சாயத்தே ஒருவழியாக முடிந்துவிட்ட நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. இந்த விஷயத்தை டெல்லி மேலிடம் வரை கட்சி கொண்டு செல்லவும், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா சென்னை வருகிறார்.. இது தமிழக காங்கிரசுக்கு தெம்பை தந்து வருகிறது..!
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது...
இதற்காக திமுக - காங்கிரஸ் இடையே வார்டு பங்கீடுகளில் திருப்தியான உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. அதனால் பேச்சுவார்த்தை முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
இடப்பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செல்வபெருந்தகை ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்... ஆனால், மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளுமாறும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் திமுக தரப்பில் சொல்லிவிட்டதாக தெரிகிறது.

உடன்பாடு
அதன்படியே காங்கிரசும், இந்த 2 நாட்களாகவே திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.. அதிலும் சுமூக உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை... காங்கிரசுக்கு மிகக்குறைந்த அளவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த விவரங்களை எல்லாம் மேலிடத்துக்கு காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.. இதையடுத்து, பேச்சுவார்த்தைகளில் சுமூகமான உடன்பாடு எட்டும்படி திமுகவினருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.. ஆனாலும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை..

அதிருப்தி
இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது... 10 சதவீதத்துக்கும் குறைவாக இடங்கள் ஒதுக்குவதால் காங்கிரசார் ஏற்க தயங்குகிறார்கள்... இதில், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் காங்கிரஸ் 21 இடங்கள் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது... ஆனால் அந்த அளவுக்கு காங்கிரசுக்கு இன்னும் வார்டுகள் கிடைக்கவில்லை.

வார்டுகள்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 21 வார்டுகளை காங்கிரஸ் கேட்கிறது.. 12 இடங்கள்தான் தருவோம் என்று திமுக கறாராக சொல்கிறது.. இதனிடையே, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் காங்கிரசார் தனித்து போட்டியிடப் போவதாக சொல்லி விட்டது கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பி வருகிறது..

நெருக்கடி
இப்படிப்பட்ட சூழலில்தான், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை தீர்க்கவும், திமுகவிடம் பேசி ஒரு சுமூக முடிவு எடுக்கவும், டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை மேலிடம் நியமித்துள்ளது... இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ரமேஷ் சென்னிதலாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைவு மற்றும் பரப்புரைக்கான பணிகளை மேற்பார்வையிடும் மூத்த தேர்தல் பார்வையாளராக தங்களை காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இழுபறி
கேரள மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் சென்னிதலா இன்று சென்னை வருகிறார்.. அவருடன் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத்தும் வருகிறார்... இவர்கள் அநேகமாக இன்று இரவு அல்லது நாளை காலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசஉள்ளனர்.. இது காங்கிரஸ் தரப்பினருக்கு நம்பிக்கையையும், தெம்பையும் ஏற்படுத்தி வருகிறது.. நாளைய தினம் இதற்கான பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications