திமுக அரசை சீண்டும் வகையில் அறிக்கை... சத்தியமூர்த்திபவன் மீது கடுகடுக்கும் அறிவாலயம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள ஒரு அறிக்கை கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலை பற்றி அறிந்தும் மருத்துவர்கள் ஊதியக் கோரிக்கை விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி இப்படியொரு அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளதாக கருதுகிறது திமுக தலைமை.
ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் உள்ள சூழலில் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை நிலைமையை இன்னும் சூடாக்கியுள்ளது.

குறைந்த ஊதியம்
தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சில வரிகள் பின்வருமாறு, ''நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25 ஆவது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட, அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.''

அறிக்கை
''கடந்த 10 ஆண்டுகள் களத்தில் போராடிய மருத்துவர்களுக்குக் குரல் கொடுத்து வந்த முதலமைச்சர் அவர்களுக்கு மருத்துவர்களின் வலி நன்றாகவே தெரியும். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான PB4 @12yrs ஐ முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.10 ஆண்டுகளாக மனப்புழுக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.''

ரூ.300 கோடி
அரசு மருத்துவர்கள் மீது திமுக அரசுக்கு அக்கறையில்லாததை போல கே.எஸ்.அழகிரியின் அறிக்கை அமைந்துள்ளதாக கருதுகிறார்கள் ஆட்சியாளர்கள். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 300 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக தேவைப்படுவதால், அதற்குரிய வருவாய் வழிமுறைகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதற்குள் அழகிரி இதில் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதற்கான அவசியம் என்ன வந்தது எனவும் கேள்விகள் எழுகின்றன.

ஆலோசனை
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டல் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் கே.எஸ்.அழகிரியிடம் ஸ்டாலின் இது குறித்து ஆலோசிக்கவில்லை. ஒருவேளை அதன் எதிரொலியாக தான் இப்படி ஒரு அறிவுரை அறிக்கையை சத்தியமூர்த்தி பவன் வெளியிட்டதோ என விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications