பாஜக கனவில் 'மண்'.. அதிமுக கனவில் 'எண்'.. திமுக கனவில் 'வின்' - கொட்டாவி விடும் தஞ்சாவூர்
சென்னை: தஞ்சை சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, 'கடையை மூடு கணேசா' மோடில் இதர கட்சியினர் இருப்பதாக தகவல்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதில், தஞ்சை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ, டி.கே.ஜி. நீலமேகத்திற்கே மீண்டும் சீட் வழங்கியுள்ளது திமுக.

பரிச்சயம் இல்லா வேட்பாளர்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி, இம்முறை ஏனோ ஒரு அல்டிமேட் தொகுதியாக இடம்பிடிக்கத் தவிறிவிட்டது. அதிமுக சார்பில் இங்கு பகுதி செயலாளர் அறிவுடை நம்பிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் கட்சியினர் மத்தியில் மட்டும் பிரபலமான அறிவுடை நம்பிக்கு, மக்கள் மத்தியில் அதிகம் பரிச்சயம் இல்லை. மற்றொரு பகுதி செயலாளர் சரவணனும் சீட் கோரியிருந்தார். அதேபோல், முன்னாள் எம்பி பரசுராமனும் சீட் கேட்டிருந்தார். ஆனால், பரசுராமன் ஏற்கனவே எம்பியாக இருந்ததால், அறிவுடைநம்பிக்கோ அல்லது சரவணனுக்கோ சீட் வழங்க வேண்டும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். அதுபோல், அறிவுடைநம்பிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் செலவு
இந்த நிலையில் தான் தஞ்சையில் கடந்த 2019 இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற டி.கே.ஜி நீலமேகத்திற்கே மீண்டும் திமுக சீட் கொடுத்துள்ளது. போன இடைத்தேர்தலில் கடுமையாக செலவு செய்திருந்த நீலமேகம், அடுத்த இரண்டே வருடத்தில் மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், அவர் தரப்பில் அதற்கெல்லாம் கலவைப்படவில்லை.

அமமுக வெயிட்டிங்
சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை எனில், தஞ்சை தொகுதி சவால் நிறைந்த களமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதால், அதிமுகவை சுற்றியிருந்த சிக்கல் சற்று விலகியது. எனினும், அமமுக இன்னும் தஞ்சைக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.

வைத்திலிங்கம் ஐடியா
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், தஞ்சாவூரை பாஜகவுக்கு கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் இருந்தது. ஏனெனில், முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான வைத்திலிங்கத்தின் மைத்துனர் தவமணியும், வைத்திலிங்கத்தின் மகன்களில் ஒருவரும் தஞ்சையில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. ஒருக்கட்டத்தில் இது குடும்ப சண்டையாக மாற, இந்த சிக்கலே வேண்டாம் என்று, தஞ்சையை பாஜகவுக்கு ஒதுக்க வைத்திலிங்கம் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

பாஜக பிளான்
இதை அறிந்த பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம், சீட் கேட்பதாகவும் தகவல் வெளியானது. பாஜகவும் தஞ்சை தொகுதியை கேட்டு பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தது. டெல்லியில் இருந்து அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்ட விருப்ப தொகுதிகள் பட்டியலில் தஞ்சாவூரும் இடம் பெற்றிருந்தது. ஆனால்,முருகானந்தம் மீது கட்சியில் சில நிர்வாகிகளும், அதிமுகவினரும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சீட் கொடுத்தால், அதிமுகவினரே அவரை தோற்கடித்து விடுவார்கள் என்று தகவல் தலைமைக்கு தெரிவிக்கப்பட, ஏற்கனவே சீட் கேட்ட அறிவுடை நம்பிக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.

திமுக குஷி
தஞ்சையில் ஆர்வமுடன் காத்திருந்த பாஜக, தேர்தலில் ரேஸில் இருந்து வெளியேற, அதிமுக வேட்பாளருக்கும் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால், திமுக எளிதாக தஞ்சையில் வெல்லும் என்பதே இந்த நிமிடம் வரையிலான கெஸ்ஸிங்காக உள்ளது. தவிர, தஞ்சையில் வெற்றிப் பெற முடியாவிட்டாலும், முடிந்த அளவு கணிசமான வாக்குகளையாவது பெற வேண்டும் என்று அதிமுக வேட்பாளருக்கு தலைமையில் இருந்து உத்தரவு வந்திருக்கிறதாம். அதாவது, திமுக வெற்றிப் பெற்றாலும், வாக்குகள் வித்தியாசம் என்பது குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications