வந்தே பாரத் 2வது மிஷன்.. தமிழகத்திற்கு ஏன் விமானம் இல்லை.. மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: 'வந்தே பாரத்' மிஷனின் பயண அட்டவணையில் தமிழ்நாட்டிற்கு விமானச் சேவை வழங்கப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தள்ளார்.
கொரோனா பரவலில் சிக்கி, வெளிநாடுகளில் தவிப்புக்குள்ளாகியுள்ள இந்தியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் பணியை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக வந்தே பாரத் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்து சிறப்பு விமானங்களை பல்வேறு நாடுகளுக்கும் அது இயக்கி வருகிறது.
இருப்பினும் தமிழகத்துக்கு இதுவரை எந்த விமானமும் இயக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ்ய மீரான் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தார். அதில், வந்தே பாரத் 2 மிஷன் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை அழைத்து வரும் இரண்டாவது கட்ட விமான பட்டியலில் தமிழகத்திற்கான எந்த விமானமும் இல்லாது கண்டு அதிர்ச்சி அடைந்து திமுக தலைவர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
எங்களுக்காக ஒலித்த உங்கள் குரல்... ஓமனில் இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய சிறுமி
இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், 'வந்தே பாரத்' மிஷனின் இந்தப் பயண அட்டவணையில் தமிழ்நாட்டிற்கு விமானச் சேவை வழங்கப்படவில்லை என்பதை மிகுந்த கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப, தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்யுமாறு மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.