சென்னையை மொத்தமாக தட்டிதூக்குவோம்.. உற்சாகத்தில் திமுக.. காரணம் இதுதான்!
சென்னை: சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும் இந்தமுறை மொத்தமாக நாங்கள் தட்டிதூக்க போகிறோம் என்று திமுகவினர் உற்சாகமாக உள்ளனர். இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளை காரணமாக கூறுகிறார்கள்.
அதிமுக அரசின் கடைசிகால செயல்பாடுகளை முக்கிய காரணமாக கூறும் திமுகவினர், மநீம, அமமுக போன்றவை பிரிக்கப்போவது அதிமுகவின் வாக்குகள் தான், தங்கள் வாக்கு நிச்சயம் பிரியாது என்றும் நம்புகிறார்கள்.
2011ல் திமுகவிற்கு ஏற்பட்டதை போன்று அதிமுக 2021 தேர்தலில் (இப்போது) சந்திக்கும் என்று திமுகவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வென்றதை கூறுகிறார்கள். அத்துடன் வலுவான வியூகம், கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளோம் என்கிறார்கள்.

அதிமுக வெற்றி
பொதுவாகவே சென்னை என்பது திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தது. சட்டசபை தேர்தல் வரலாற்றி திமுக மிக மோசமாக தோற்ற ஆண்டுகள் என்றால் 1991, 2011ல் மட்டுமே. 2011ல் செனனையின் புறநகர் பகுதியில் உள்ள கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் ஜெ அன்பழகன் வெற்றி பெற்றார். மற்ற எல்லா இடங்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வென்றன. ஆனால் முந்தைய வரலாறுகளை பார்த்தால் திமுகவே பெரும்பாலும் சென்னையில் வென்று இருந்தது.

சென்னையில் வெற்றி
இதனிடையே 2014ல் அதிமுக எப்படி 37 இடங்களில் வென்றதோ அதேபோல், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தேனியை தவிர அத்தனை தொகுதிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே வென்று இருந்தன. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதியிலும் திமுகவே போட்டியிட்டது. இந்த நான்கிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்றிருந்தது.

பிரிந்த வாக்குகள்
திமுக 2019ல் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு அலை என்று அப்போது பெரிதாக பேசப்பட்டது. திமுகவின் மிகப்பெரிய வெற்றிக்கு இன்னொரு காரணம், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்றவை கணிசமாக பிரித்த வாக்குகள் காரணமாக கூறப்பட்டது.

மொத்தமாக வெல்வோம்
இந்த முறையும் அதேநிலையே உள்ளதாகவும், எனவே திமுக கூட்டணி சென்னையில் மொத்தமாக வெற்றி பெறும் என்று திமுகவினர் உற்சாகமாக உள்ளனர். டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமான் நாம் தமிழர் கட்சி போன்றவை பிரிக்கும் வாக்கும் அதிமுகவின் வாக்குகள் தான் என்றும், அதேபோல் நடந்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அத்தனை தொகுதிகளையும் தட்டி தூக்குவோம் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

திமுக நம்பிக்கை
இந்த முறை சட்டசபை தேர்தலில் வேளச்சேரியை தவிர அத்தனை தொகுதியிலும் திமுகவே நிற்கிறது. வேளச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் போட்யிடுகிறது. சென்னையில் நாம் தான் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையால் திமுக வேறுகூட்டணி கட்சிகளுக்கு தரவில்லை என்கிறார்கள். வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சி போராடித்தான் பெற்றதாக சொல்கிறார்கள். திமுகவின் நம்பிக்கை எந்த அளவிற்கு பலன் தரும் என்பதை மே 2ம் தேதி பார்ப்போம்.












Click it and Unblock the Notifications