திமுகவுக்கு வருபவர்களை வரவேற்கிறோம்.. உடனடி பதவி என்பதை பரிசீலிக்கவும்.. உடன்பிறப்புகள் உள்ளத்தில்.!
சென்னை: திமுகவை நோக்கி மாற்றுக்கட்சியினர் சாரை சாரையாக வந்துகொண்டிருக்கும் நிகழ்வு உடன்பிறப்புகள் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சிலர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
இவர்கள் திமுகவுக்கு வருவதை உடன்பிறப்புகள் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு உடனடியாக முக்கிய பதவிகளை கொடுக்க வேண்டுமா என்பது தான் அவர்களின் கேள்வியாக உள்ளது. இதைத்தான் சமூகவலைதளப் பதிவுகளிலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

10 ஆண்டுகாலம்
திமுக ஆட்சியை பிடிக்க கூடாது என யாரெல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு அழைந்தார்களோ, செயல்பட்டார்களோ அவர்களெல்லாம் இன்று அதே திமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர். எந்த ஸ்டாலினை தேர்தலின் போது விமர்சித்தார்களோ அதே ஸ்டாலினின் அப்பாயிண்ட்மெண்ட்க்காக பலர் காத்திருக்கின்றனர். திமுகவுக்கு சோதனையான காலமாக இருந்த கடந்த 10 ஆண்டுகாலமும் கட்சியின் கட்டமைப்பு கட்டிக்காக்கப்பட்டதற்கு பிரதிபலன் எதிர்பாராத அக்கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களே காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆட்சியின் பலன்கள்
இப்படிப்பட்ட தொண்டர்களே கூட இன்னும் திமுக ஆட்சியின் பலன்களை பெற முடியாத சூழலில், மாற்றுக்கட்சியில் இருந்து வரும் சிலர் எளிதாக காரியங்களை சாதித்துக் கொள்ளத் தொடங்கியிருப்பது தான் உடன்பிறப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்லிடை பீர்முகமது என்ற திமுக நிர்வாகி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலைமைக்கு கருத்துச் சொல்லும் அளவுக்கெல்லாம் தமக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும் ஆனாலும் மனதில் உள்ள காயம் ஆறவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

பதவி வேண்டாம்
இதேபோல் எஸ்.கே.செந்தில்குமார் என்ற மற்றொரு திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவில், கல்லிடை பீர்முகமது கருத்தை நூறு சதவீதம் வரவேற்பதாக கூறியிருக்கிறார். மேலும், திமுகவுக்கு வரும் மாற்றுக் கட்சியினரை தாங்கள் மனதார வரவேற்பதாகவும் 2 ஆண்டுகள் அவர்கள் திமுக உறுப்பினராக மட்டும் செயல்பட்ட பிறகு பொறுப்புகளை அளிக்க வேண்டும் எனவும் தங்கள் உள்ளத்தில் உள்ளதை கோரிக்கையாக தலைமைக்கு வைத்து வருகிறார்கள்.

மாற்றுக்கட்சி
அதிமுக முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மநீம முன்னாள் நிர்வாகி மகேந்திரன், பத்மபிரியா, அமமுக பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், எடப்பாடி தொகுதி அதிமுக பொறுப்பாளர் செல்லத்துரை, என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியில் இணைந்தவர்கள் பட்டியல் நீள்கிறது. இதனிடையே இன்னும் இணையவிருப்பவர்களின் பெயர் பட்டியலும் நீளமாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications