குலதெய்வ கோவிலில் வேட்பாளர் பட்டியலை வைத்து கும்பிட்ட துர்கா - நல்ல நேரத்தில் பெயரை வாசித்த ஸ்டாலின்
திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். வெள்ளிக்கிழமை நாளான இன்று ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். வழக்கமாக நாள் நட்சத்திரம் பார்க்காமல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும் திமுக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து வேட்பாளர்கள் பட்டியலை வாசித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் மு.க ஸ்டாலின். அவரது மனைவி துர்கா தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களுக்கு பயணம் செய்து வேண்டுதலை வைத்தார்.
வேட்பாளர்கள் பட்டியல் ரெடியான உடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று பட்டியலை வைத்து வழிபட்ட துர்கா ஸ்டாலின், சிறப்பு பூஜை செய்து ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வைத்துள்ளார். வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள பெயரை வாசித்தார் ஸ்டாலின்.
வீட்டை விட்டு கிளம்பிய ஸ்டாலின்
வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் காலையில் 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து வீட்டை விட்டு கிளம்பினார். கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பாக பட்டியலை வைத்து வழிபட்டார்.
வழிபட்ட ஸ்டாலின்
மெரீனா கடற்கரையில் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வழிபட்டார் மு.க.ஸ்டாலின். தலைவணங்கி கும்பிட்டு விட்டு அண்ணா அறிவாலயத்திற்கு கிளம்பினார்.
வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு
திமுக வேட்பாளர்கள் பட்டியலில் முக்கியமான பெயர்கள் இடம்பெற்ற உடன் அந்த பட்டியலுடன் சென்று குலதெய்வ கோவிலில் வைத்து வழிபட்ட துர்கா,ஜோதிடர் குறித்து கொடுத்த நல்ல நேரத்தில் வேட்பாளர்கள் பெயரை ஸ்டாலினை வாசிக்க வைத்துள்ளார்.
கடவுளின் ஆசி கிடைக்குமா
திருச்செந்தூர் முருகன், நெல்லை நாங்குனேரி பெருமாள் முதல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வரை துர்கா ஸ்டாலின் வேண்டுதல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின். மகன் உதயநிதி முதல் முதலாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். கணவர் முதல் முதலாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். திமுகவின் வெற்றிக்காக கோவில் கோவிலாக சென்று வழிபட்டுள்ளார் துர்கா. கடவுளின் ஆசி கிடைக்குமா மே 2ஆம் தேதி தெரியவரும்.